Thursday, 24 March 2016

மரம் - ஜீ.முருகன்

ஜீ.முருகன் எழுதிய ‘மரம்’ நாவல் குறித்து ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதியிருந்தேன்: நாவலில் வருகிற முக்கால்வாசி கதாப்பாத்திரங்கள் டால்ஸ்டாய், மார்க்சிம் கார்க்கி, மார்க்கஸ், சில்வியா ப்ளாத் பற்றி பேசினாலும் ஜூ.முருகனின் அறிவுஜீவித்தனம் தான் நாவல் முழுக்க தலைவிரித்தாடுகிறது. 240 பக்க அபத்தம் இந்நாவல்.

oOo

இதற்கு வந்த எதிர்வினைகள் -

Bala Nandakumar: கொண்டாடப்படும் நாவல்கள் எதுவுமே ஒவ்வொருவரின் பார்வையில் அபத்தம்தான். ஒரு நாவலில் படைப்பாளனின் அறிவுஜீவித்தனம் இருப்பதில் தவறில்லை. படிக்கிற வாசகன் அறிவுஜீவியாக அதை விமர்சிப்பது தான் அபத்தம். உண்மையில் அபத்தங்களற்ற ஒரு நாவல் இதற்கு மேல்தான் எழுதப்பட வேண்டும். நீங்கள் முயற்சிக்கவும்.

Gargy Manoharan: கடைந்தெடுத்த நடுத்தர வர்க்க வாசக மனநிலை ஒன்று உண்டு. தனது இருப்பையும் சமூக விழுமியங்களையும் கேள்வி கேட்காத கதைகளை பொழுது போக்காக செய்து பார்க்கும் எளிய சமாச்சாரங்களை போதுமென்று பார்க்கும். சமூக விழுமியங்களை உடைத்து நொறுக்கும் கதைகளை இந்த நடுத்தர வர்க்க மனநிலையால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் எவ்வளவு படித்தாலும் நம் வீட்டுப் பெண்கள் எதை படிக்க வேண்டும் பார்க்க வேண்டும் என்ன மாதிரி உடையுடுத்த வேண்டுமென சதாவும் கண்காணிக்கிற மனதால் இந்த மீறல்களை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. உண்மையில் தலைக்கனம் மிக்க வாசகர்கள் பிரதியிடமல்ல தன்னிடமே தோற்றுப் போகிறார்கள்.

Lakshmi Saravanakumar: மரம் நாவல் முழுக்க முழுக்க அபத்தம்ன்னு ஒரு பதிவு எழுதி இருக்கீங்க. நல்லது. நாவல்னா என்ன அபத்தமே இல்லாத நாவல் எப்டி இருக்கனும்? அபத்தங்க்ற வார்த்தைக்கான முழுமையான அர்த்தம் என்னன்னு விலாவாரியா சொல்ல முடியுமா?

Karunanidhi Arjith: இது போன வருஷம் மரம் நாவல் வாசித்த போது பதிவிட்டது. சமீபத்தில் இரண்டே நாளில் முடித்த நாவல் இதுவாக தான் இருக்கும். அவ்வளவு சுவாரசியமாக இருந்தது ஆனால் சுவாரசியம் மனிதர்களை நினைத்து பெருமிதமாக இல்லை வேதனையாக இருந்தது. எனக்கு ஆச்சரியமே மனதில் நினைப்பதை எல்லாம் எழுத்தாக கொண்டு வர முடியுமா என்ற கேள்வி நகுலனின் எழுத்தில் அவரே சொல்லி இருப்பார் ஆனால் இப்படி கவுச்சியான எண்ணங்களையும் கதாபாத்திரங்களாக படைத்து அவர்கள் வழியாக கூறுகிறார் ஆசிரியர். நாவலின் அனைத்து கதாபாத்திரங்களும் காமத்தின் வேட்கையில் தான் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் எல்லோருமே சமூகத்தில் நல்ல மதிப்பு உள்ள வேலைகளில் இருக்கின்றனர். கவிஞர், கம்யூனிஸ்டுகள், உலக இலக்கிய வாசிப்பாளர், பிரபலாமான ஒவியன் என்று அதிலும் கோபாலர் என்ற கதாபாத்திரம் ஆரம்பம் முதல் இறுதிவரை வருகிறது ஆனால் உயிரோடு இல்லை மரமாகவும் மற்றவர்களின் நினைவுகளிலும் வந்து கொண்டே இருக்கிறார்.நாவலின் முடிவே கோபாலரின் பதில்களிலேயே இருப்பது ஆச்சரியமாக இருந்தது. என்னை கவர்ந்த கதாபாத்திரம் கிரிகரன் தான் ஆனால் அவனின் முடிவும் பின் அவன் பற்றிய உண்மைகளும் கூட கூச செய்தது ஆனால் அதற்கு காரணம் அவன் அம்மா சந்திரா, அப்பா கண்ணன் தங்கை ப்ரியா நண்பன் ரவி & சிவன் தான். அதே போல தோழர் பாலு அவரின் காம அத்தியாயங்களை வாசிக்கும் போதெல்லாம் பரிதாபம் தான் வந்தது மனிதனை எந்தளவுக்கு கேவலமாக கொண்டு போகும் என்று. ஆரம்பம் முதலே எந்த கதாபாத்திரம் பேசுகிறது என்ற ஆவலை தூண்டி பின்னர் யாரவர் என்பதை நமக்கு தெரிவிப்பதை இறுதி அத்தியாயம் வரை தொடர்வது எதிர்பார்ப்பை தக்கவைக்கின்றது. பல இடங்களில் ஏற்று கொள்ள முடியாதவைகள் தான் என்றாலும் நிச்சயம் ஆங்காங்கே நடப்பது என்றே நினைக்க தோன்றுகிறது. ஆன்மீகத்தை எவ்வளவு வியாபராமாக்க முடியும் என்பதையும் காமத்தின் எல்லை எதுவென்ற கேள்வியையும் மனிதர்களின் உண்மையான பிம்பங்களை வெளிகண்டால் சமூகத்தின் நிலை என்ன என்பதையும் கேள்வியாக கேட்டே நாவல் முடிந்தது போல தோன்றியது. நாவலை பற்றி வேறு எதுவும் கூற தெரியவில்லையா?? பக்குவமில்லையா??? எதுவும் இல்லை எனக்கு பயமாக இருக்கிறது. நிச்சயம் காலம் கடந்து நிற்க போகும் நாவல் மரம் அதை மட்டும் உறுதியாக என்னால் கூற முடியும்.

oOo

தன்னிலை விளக்கம்

உரையாடலில் எழுத்து நடையும் பிற இடங்களில் பேச்சு வழக்கும் கலக்கக்கூடாது என்பது அடிப்படையான விதியாகக் கருதுகிறேன். நாவலில் சந்திரா என்றொரு கதாப்பாத்திரம், இவரின் முதல் கவிதைத் தொகுப்பு இலக்கிய உலகில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி நிறைய பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கும். அவருக்கு குரங்கென்றால் நடுக்கமாம். குரங்குகளால் அவருக்கு நேர்ந்த சம்பவம் ஒன்றை அவள் ரவியிடம் இவ்வாறு கூறுகிறாள்:

"ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில அந்தக் கூட்டத்திலிருந்த குரங்குகள்ல சிலது எனது அறைக்குள்ள இருந்திச்சி. வெளியே நின்னுகிட்டே சத்தம் போட்டு விரட்டிப் பார்த்தேன். அது என்னை சட்டையே செய்யல. ஒன்னு சாவகாசமா அலமாரியிலிருந்த என்னோட துணிகளை ஒவ்வொன்னா எடுத்து கலைச்சி போட்டுச்சி. மேஜைமேல உட்கார்ந்திருந்த குரங்கொன்னு புத்தகங்களை எடுத்துப் பார்த்து கீழே வீசிக்கிட்டிருந்தது. இன்னொரு குரங்கு ட்ரஸ்ஸிங் மேஜை மேல ஏறி கண்ணாடியைப் பார்த்துக்கிட்டே ஃபேர் அன் லவ்லி ஃபேஸ்டை கடிச்சிக் கீழே பிதுக்கிவிட்டது.

"நான் வெளியே ஓடிப்போயி பக்கத்து வீட்டு அக்காவிடம் விஷயத்தைச் சொன்னேன். அவ தன்னோட புருஷன்கிட்ட சொன்னா. அவர் ஒரு நீண்ட மூங்கில் கம்பைத் தேடி எடுத்துக்கிட்டு வந்தார். இரண்டு கதவையும் விரியத் திறந்துவிட்டு அவர் உள்ளே போயி கம்பை வீசியதும் இரண்டு குரங்குகள் மிரண்டு வெளியே ஓடிப்போச்சி. மேஜைமேல் உட்கார்ந்திருந்த குரங்கு மட்டும் அவரைப் பார்த்து பல்லைக் காட்டி உறுமிச்சி. அவர் பயந்துட்டார். அது சாவகாசமா கீழ குதிச்சி இறங்கிப் போனது. அதன் கையில பாத்தா என்னோட கவிதைத் தொகுப்பு இருக்கு.

"நான் மிரண்டு போயிருந்தேன். இனிமே அந்தக் குரங்குகளால என்னென்ன விபரீதங்கள் நிகழப் போகுதோன்னு பயந்தேன். கனவுல குரங்குகளா வந்து ரகளை செய்ஞ்சது. ஒரு கனவுல வாய் பேச்சு வராம ஒரு மரத்தைப் பிடிச்சிகிட்டு நிக்கிறேன், பின்னால வந்து ஒரு குரங்கு என்னை... சொல்லவே கூச்சமாக இருக்கு. மறுநாள் நான் ஸ்கூலுக்குப் போய் திரும்பி வரும்போது பாக்கிறேன், ரோடு ஓரமா என்னோட கவிதைத் தொகுப்பு பக்கம் பக்கமா கிழிஞ்சி காத்துல பறந்துகிட்டிருக்கு. மரத்துக்கு மேலே சில குரங்குங்க உட்கார்ந்து என்னோட கவிதைத் தொகுப்போட பேப்பர கையில வைச்சிக்கிட்டு ஆபாசமா சேஷ்டை பண்ணிக்கிட்டிருக்கு. நான் அங்கிருந்து வீட்டுக்கு ஓடிவந்து படுக்கையில விழுந்து அழுதேன். அழுவதைத் தவிர என்னால வேறு என்ன செய்ய முடியும்? யார் அதைத் தடுக்க முடியும், தண்டிக்க முடியும்?" என்றாள். [பக்: 17]

மேலே குறிப்பிட்டுள்ள வரிகளில் உள்ள அபத்தத்தை நான் மேற்கோள் காட்டி விளக்க வேண்டிய தேவையில்லை என்று நம்புகிறேன். பக்கத்திற்கு பக்கம் இது போன்ற செயற்கையான, தட்டையான உரையாடல்களே. கதையின் போக்கை இதுபோன்ற ஒரு வார்த்தை ஒரு வரி நெருடலை ஏற்படுத்திவிடக்கூடும்? இவரால் சிறப்பான ஒரு உரையாடலைக் கூட நாவலில் நிகழ்த்த முடியவில்லை. உரையாடல்களில் உச்சம் எந்தத் தருணத்திலும் நிகழவில்லை. உங்களால் இந்நாவலில் மயிர்கூச்செறியச் செய்யும் ஒரே ஒரு உரையாடலை குறிப்பிட முடியுமா?

O

உரையாடல் என்றல்ல வர்ணனைகள் கூட எழுதிப் பழகும் வாசகனின் பயிற்சிக் கதைகளைப் போன்றே இருக்கின்றன.

தோழர் பாலு சிவனை மாநாட்டுக் கருத்தரங்கிற்கு அழைத்திருந்தார். 'சும்மா வந்து பாருங்க' என்றார். மாநாட்டுக்காக அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளை கண்டு அவன் பிரமிக்க வேண்டும் என்று அவர் அழைத்திருக்கலாம். உண்மையில் பிரமிக்கும்படி தான் அவர் காரியங்களைச் செய்திருந்தார்.

நகரம் முழுக்க எத்தனை வித போஸ்டர்கள்! கட்சித் தலைவர்களும், சிறப்பு விருந்தினர்களும், வினோத புகைப்படங்களும், ஓவியங்களும் நிரப்பப்பட்ட எத்தனை டிஜிட்டல் பேனர்கள்! மற்ற அரசியல் கட்சிக்கெல்லாம் சவால் விடும் நோக்கத்தில் இதெல்லாம் செய்யப்படிருந்தது போல இருந்தது. [பக்: 53]

O

'இங்கே வந்து பார்' சிவன் ரவியை அழைத்தான். ரவி அவனருகே போய் நின்றான். அவர்களுக்கு முன் உயரமாக வளர்ந்த புற்கள் நின்றிருந்தன. அதற்குப் பூக்கும் பருவமது. பார்வை பட்ட தொலைவு வரை ஒரே உயரத்தில் பரந்து வளர்ந்திருந்தன புற்கள். காற்று அதன் மேல் விளையாடுவதைத் தான் சிவன் ரவிக்கு காட்ட விரும்பினான். கடலைப் போல அலைகள் தோன்றி நகர்ந்துகொண்டிருந்தன புற்களின் மேல். ஒரு அற்புதத்தைக் கண்டது போல ரவி அதில் லயித்துப் போனான். [பக்: 77]

O

கதாப்பாத்திரங்களின் சித்திரம் நம் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியதென்றால் அவர்கள் பேசுவதும் செய்வதும் வேறுவிதமாகத் தோன்றும் படியாக சித்தரிக்கப்படுகிறது. இதனாலேயே அவன் அவளை வைத்திருப்பதாயும் இவள் அவனை வைத்திருப்பதாயும் இரண்டு மூன்று அத்தியாயங்கள் பேசிவிட்டு அடுத்த அத்தியாயத்தில் அதே கதாபாத்திரங்கள் மரம், மலை, குரங்கு, தத்துவம், ஆன்மீகம், டால்ஸ்டாய், சில்வியா ப்ளாத், எலியட் என்று பேசினால் அது கதாப்பாத்திரங்களின் குரலாக அல்லாமல் ஆசிரியரின் குரலாகவே ஒலிக்கின்றது. இதனாலேயே ஆசிரியரின் அறிவுஜீவித்தனம் நாவலில் தலைவிரித்தாடுவதான பிம்பம் ஏற்படுகிறது.

கிரி வீட்டிலும் நண்பர்களுடனும் சரியாக உரையாடாமல் சாந்தமாக இருப்பதாகச் சித்தரித்துவிட்டு பின்பு பாதிரியாருடன் சண்டையிடுவது, காதலியை உறவு கொள்ள அழைப்பது போன்ற அத்தியாயங்கள் நம்பும்படியாக எழுதப்படாததாலேயே அபத்தமாகத் தோன்றுகிறது. முன்னுக்குப்பின் முரணான வாக்கியங்களும் முன்னுக்குப்பின் முரணான கதாப்பாத்திரங்களின் சித்திரமும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெளிப்படுகிறது. ஆங்காங்கே இவர் மரம், குரங்கு என பேசும் படிமங்கள் – உருவகங்கள் – தத்துவங்கள் அபத்தமாக அன்றி ரசிக்கும்படியாக இல்லை. மரம் நாவலிலுள்ளவர்களைப் போன்று எதார்த்தத்தில் இல்லையா என்றால், இருக்கிறார்கள், ஆனால் அதற்கான நியாயம் நாவலில் மருந்திற்கும் இல்லை. தனது இருப்பையும் சமூக விழுமியங்களையும் கேள்வி கேட்கும் இத்தகைய கதைகளுக்கு, கதாப்பாத்திரங்களுக்கு எவ்வித நியாயமும் சேர்க்கவில்லை.

O

சிவன் குரங்குகளை வரையும் ஓவியன். ஒரு கருத்தரங்கிற்கு குரங்கையும் அழைத்துச் செல்கிறான்.

”இது என்ன தோழர் கூத்து!” என வியந்தார். “திடீர்ன்னு இந்தத் தொழில்ல இறங்கிட்டீங்க.”

சிவன் சிரித்தான். “ரெண்டு வாரத்துக்கு முன்ன மலைப்பாதையில் இது அடிப்பட்டுக் கிடந்தது. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் கட்டுப் போட்டுக்கொண்டுவந்து மொட்ட மாடியில் வச்சிருந்தேன். நல்லா பழகிடுச்சி. சங்கிலி கூடத் தேவையில்லை. கூப்பிட்டா வந்துடும். இப்ப எனக்கு நிரந்தர மாடல் இதுதான்”

“’என்ன பேர் வச்சிருக்கீங்க?”

“பேரா!” சிவன் சிரித்தான். இதுவரை பெயர் பற்றி யோசிக்கவே இல்லை அவன். பெயர் எதற்கு?

சிவன் சொன்னான், “காப்ரியோல் கார்சியா மார்க்வெஸ்”

தோழர் பாலு வியப்புடன் அவனைப் பார்த்தார்.

“மார்க்வெஸ்சை உங்களுக்குத் தெரியாதா?”

“அவர் கம்யூனிஸ்டா? இந்த பெயரை கேள்விப்பட்டிருக்கேனே”’ என்றார்.

“அவர் கம்யூனிஸ்டா என்று தெரியாது. ஆனால் பிடல் காஸ்ட்ரோவின் நண்பர்.”

“சரி தோழர், அதை விட்டுட்டு வாங்க. உள்ள வந்து உட்காருங்க” என்றார்.

“இதுவும் வரட்டுமே. பயப்படாதீங்க. என் மடியிலயே உட்கார வச்சிகிட்டிருக்கேன்” என்று தன்னுடைய விருப்பத்தை முன் வைத்தான்.

“இதுவரைக்கும் அரங்குக்கு உள்ள விலங்குகளை அனுமதிச்சதே இல்லை” என்று சங்கடப்பட்டார் தோழர்.

’கதவு திறந்தபோது உள்ளே விலங்கொன்று கர்ஜித்ததே’ என்று கேட்கலாமென நினைத்தவன் நாவை அடக்கிக் கொண்டான்.

இந்தக் குரங்கு கருத்துகளை ருசி பார்ப்பதற்காகவே வந்திருக்கிறது என்றும், இது கலகமோ புரட்சியோ செய்யாது என்றும் உறுதியளித்தபிந்தான் இருவருக்கும் அவர் அனுமதி அளித்தார். பார்வையாளர் அட்டையைக் குரங்குக்கு எங்கே குத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டதால், அவனுக்கு மட்டும் வாங்கிக் கொண்டு உள்ளே போனான்.

இத்தகைய தட்டையான பகடியை உங்களால் ரசிக்க முடிகிறதா?

O

கதைக்கு வருவோம். கிரியும் ரவியும் நண்பர்கள். கிரியின் தாயார் சந்திரா. சந்திராவிற்கும் ரவிக்கும் உறவு. இலைமறைக் காயாக இருந்த உறவு ஒரு முறை கிரிக்கு உடல் நிலை சரியில்லாமலிருக்கையில் ரவி துணைக்கு உடன் இருக்கும் போது, கிரியின் அருகிலேயே சந்திராவும் ரவியும் சல்லாபிக்க எத்தனிக்கிறார்கள். அதை கிரி பார்த்தும்விடுகிறான். இருந்தும் எப்போதும் போலவே ரவியோடு பேசுகிறான். இது ‘வடுவாக இல்லாமல் புண்ணாக’ (என்ன ஒரு உவமை!) ரவிக்கு வலிக்கத் தான் செய்கிறது. சிவன் ரவிக்கு புதிதாக அறிமுகமாகும் நண்பன். ஓவியன். என்ன தான் ரவி பெரிய கவியாக இருந்தாலும் ரவியின் உறவுகளைப் பற்றி ரவிக்கு புரிய வைப்பவன் சிவன். சந்திராவிற்கு அறிமுகமாகும் சிவனும் சந்திராவோடு சல்லாபிக்கிறான். ரவிக்கு தேவகி என்னும் இன்னொருவனின் மனைவியுடனும் கள்ள உறவு. தோழர் பாலுவிற்கு மீனா என்னும் ஒரு கிழவியின் பேத்தியுடன் கள்ள உறவு. பிரியா கிரியின் தங்கை. கண்ணனின் மகள். கண்ணன் கிரியின் அப்பா. சந்திராவின் கணவர். பிரியா தோழி சசியின் உதவியுடன் நீலப்படம் பார்க்கக் கற்றுக்கொண்டும் பின்பு சசியோடு ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபடுகிறாள். கிரி மனப்புழுக்கத்தில் தற்கொலை செய்துகொள்கிறான். அவன் இறந்த பின்பு மனதில் வருத்தம் இருந்தாலும் அவன் கணிணியில் பிரியா சுதந்திரமாக நீலப்படம் பார்க்கிறாள். அண்ணன் கிரியின் கலெக்‌ஷனைக் கண்டு திடுக்கிடுகிறாள். அவன் சந்திரா, ரவி, கண்ணன், பிரியா ஆகியோரின் புகைப்படத்தை வேறு புகைப்படத்துடன் மார்ஃப் செய்து வைத்திருப்பது தான் அவள் திடுக்கிடலுக்குக் காரணம். முத்தாய்ப்பாக கண்ணனுக்கும் அவள் மகள் பிரியாவிற்கும் உறவு. ஆண்-பெண் உறவுகள் குறித்த கலாச்சார புனைவுகளையும் கவித்துவ பாசாங்குகளையும் கலைக்கும் இத்தகைய கதையை இவருடைய உரையாடல்கள் மூலமாகவும், வர்ணனைகள் மூலமாகவும், கதாப்பாத்திர சித்தரிப்பின் மூலமாகவும் அபத்தமில்லாமல் எழுதியிருக்க முடியும் எனத் தோன்றுகிறதா?
O

எல்லோரும் கொண்டாடும் நாவலை நான் போகிற போக்கில் அபத்தமென விமர்சித்ததாக வருத்தம்/கோபம் கொண்டார்கள். இப்படியான எதிர்வினையை எதிர்கொண்ட போது நான் நாவலை அணுகிய விதம் தவறோ என்றும், இதற்கு முன் வாசித்த நாவலோ அல்லது அந்நாளைய சூழ்நிலையோ எனக்கு இந்நாவலை அபத்தமாக தோன்றும்படி செய்திருக்கலாம் என்றும் தோன்றியது. ஒரு சிறந்த நாவலை தவறாக புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக மறுபடியும் ஒருமுறை வாசித்தேன். இரண்டாம் முறை வாசிக்கும் போதும் கொண்டாடப்படும்படியாக ஒரு சின்ன விஷயத்தைக்கூட என்னால் அடையாளம் காண முடியவில்லை. அப்படி ஒரு வேளை இருந்திருந்தாலும் எழுத்தாளரின் செயற்கையான உரையாடலாலும்/கதை சொல்லல் முறையினாலும் மழுங்கடிக்கப்பட்டுவிட்டதென்பதே என் எண்ணம்.

ஜீ.முருகனின் 'மரம்' நாவலை ஒரு வேளை நான் பாராட்டி எழுதினால் அவர் நான் எழுதப்போகும் புத்தகத்தை பாராட்டி எழுதப்போவதுமில்லை அல்லது என்னோடு ஃபேஸ்புக்கில் சண்டையிடப் போவதுமில்லை. நான் புத்தக விமர்சனம் எழுதுவது பிரபலம் ஆகவோ, பிற்காலத்தில் ஒரு புத்தகம் எழுதி பெஸ்ட் செல்லிங் ஆத்தர் ஆகவோ, விருதுகள் வாங்கவோ இல்லை. நண்பர்களின் புத்தகத்தை புகழ்ந்து எழுதுவதும் சக எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பாராட்டிக்கொள்வதும் தற்போது நடந்துகொண்டிருக்கின்றது. அதற்கான தேவை எனக்கில்லை என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன். பிடித்த படைப்புகளைத் தீரத் தீரக் கொண்டாடி முடிந்த வரை மற்றவர்களிடம் அதைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் நோக்கம். ஒருவேளை இது போன்ற அபத்த நாவல்களைக் கடக்க நேரிடும் போது அதை அபத்தம் என்று பதிவதும் என் சுதந்திரம் என்றே எண்ணுகிறேன். மேலும் இதைப் பதிவதன் மூலம் என்னை வாசிப்பவர்களுக்கு கடத்த முயல்கிறேன்.

நான் எழுதியதற்கு வந்த எதிர்வினைகளில் சில ரசிகமனப்பான்மையில் எழுந்தது போலவே இருக்கின்றன. கொண்டாடப்படும் நாவல்கள் எதுவுமே ஒவ்வொருவரின் பார்வையில் அபத்தமாகத் தோன்றுவதில்லை. ஒருவருக்குப் பிடித்தது இன்னொருவருக்குப் பிடிக்காமல் போகலாம். அவ்வளவே. அது போக வாசகன் அதை அறிவுஜீவியாக விமர்சிக்கக்கூடாது என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எழுத்தாளனும் எழுதத் தெரிந்த வாசகன் தான் என்று யாரோ சொன்னதாக ஞாபகம். ஒரு எழுத்தாளன் வாசகனை தனக்குக் கீழே வைத்துப் பார்க்கத் தொடங்கினால் அங்கே அவனின் ஆளுமை அடிபட்டுவிடாதா? அபத்தங்களற்ற ஒரு நாவல் இதற்கு மேல்தான் எழுதப்பட வேண்டும் என்கிற கூற்றே கோபத்தில் எழுந்த ஒரு வாக்கியமாகவே தோன்றுகிறது.

கடைந்தெடுத்த 'தன்னை உயர்வாக' எண்ணிக்கொள்ளும் ஒரு மனோபாவமும் சில வாசகர்களிடம் உண்டு. அது நடுத்தர வர்க்க இருப்பையும் சமூக விழுமியங்ககளையும் கேள்வி கேட்காத கதைகளென இது போன்ற ட்ரான்ஸ்க்ரசிவ் கதைகளை உயர்வென கொண்டாடுவது. இது போன்ற இயல்பை மீறிய, கலாச்சாரத்தைக் கட்டுடைக்கும் கதைகளைத் தான் அடுத்த தலைமுறை இலக்கியமாகக் கொண்டாடும் - தன்னை உயர் வர்க்க வாசகன் எனக் கொண்டாடும் பொது புத்தி. இந்தக் கடைந்தெடுத்த நடுத்தர வர்க்க வாசகனாகிய நான் தினத்தந்தியின் நான்காவது பக்கத்தில் வரும் சமூக விழுமியங்களை உடைத்து நொறுக்கும் இது போன்று பல கதைகளை வாசித்தவன் தான். ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் இருக்கின்றன. அதெல்லாம் இலக்கியம் ஆகிவிட முடியுமா என்ன?

- த.ராஜன்

Monday, 2 November 2015

பூங்காற்று புதிரானது

நாம் எத்தனையோ பெண்களை கண்கொட்டாமல் பார்த்தாலும் நம்மை ஒரு பெண், ஒரு நொடி பார்ப்பதற்கு ஈடாகதல்லவா? அதன் சுகமே தனி அல்லவா? பட்டாம்பூச்சி பறப்பது, தலைக்கு மேல் பல்பு எறிவது, மின்னல் தாக்குவது எல்லாம் நடக்கும். அது வெறும் வர்ணனை மட்டும் அல்ல என்பதை அனுபவித்தவர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.

ஒரு பெண். அழகிய இளம் பெண். என் வீட்டின் அருகிலே குடி வந்திருந்தாள். குழந்தைகளைக் காணும் போதெல்லாம் இவ்வாறு வர்ணிப்பது வழக்கம் - குட்டி மூக்கு, குட்டி காது, குட்டி விரலு, குட்டி கண்ணு என. கிட்டத்தட்ட இந்த வர்ணனைகள் அவளுக்கும் பொருந்தும். கண்களைத் தவிர. அவள் பார்த்தாள் போதும் அந்த நாள் புண்ணியம் எய்திவிடும்.

என் பாக்கியம் அவ்வப்போது தெருவில் அவளைக் காணும் பாக்கியம் கிடைத்தது. தினம் தினம் புண்ணியமும் சேர்த்துக்கொண்டிருந்தேன். இருவரும் பார்வையைப் பரிமாறிக்கொண்டோம். என் இதயம் ரெக்கை கட்டி பறந்துகொண்டிருந்தது.

அவளின் சில பழக்கவழக்கங்கள், சில முக அசைவுகள் என் முன்னாள் காதலிகளில் ஒருத்தியின் சாயலை ஒத்திருந்தது. பார்த்தவுடன் இவளைப் பிடித்துப் போக, அது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அந்த முன்னாள் காதல் 'ஒரு தலைக் காதல்' என்பது குறிப்பிடத்தக்கது. அவள் தோழிகளிடம் என்னை அவள், 'அவன் ஒரு லூசு' என்று சொன்னதாக பிற்பாடு அறிந்தேன். நான் லூசு இல்லை என்பதை நிரூபிக்க முயற்சி செய்த அனைத்தும் வீணானது. இன்றும் அவள் மனதில் ஒரு லூசாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இருக்கட்டும். அவளிடம் சாத்தியமாகாததை இவளிடம் அடையத் துடித்தது மனம். உடனே தப்பான எண்ணம் வேண்டாம். உங்களைப் போல என்னுடைய மனம் கள்ளங்கபடம் கொண்டது அல்ல.

அவளிடம் பேசுவது என்று முடிவெடுத்தேன். ஒரு பெண் ஒரு ஆணிடம் பேசுவது இங்கே மிகவும் சுலபம். அதுவே ஒரு ஆண் பெண்ணிடம் பேசுவதென்றால் சாதாரண காரியமில்லை. ஒன்று பேச மறுத்து அவமானப்படுத்துவார்கள் இல்லையேல் ஒற்றை வார்த்தை பதில்களில் நம் மூக்கை அறுப்பார்கள். பெண்களை நேரடியாக கேலி செய்யும் ஆண்கள் - பெண்களிடம் பேசவே அஞ்சும் ஆண்கள். இருவரையும் பெண்களுக்கு பிடிப்பதில்லை என்றெண்ணுகிறேன். ஆக சுமூகமான உரையாடல் நிகழ்த்தலாம் என்றெண்ணினேன். <தற்பெருமை அல்லது சுயதம்பட்டம்>

'இரண்டு நாள் தான் பார்த்திருக்கிறாய். அதற்குள்ளாகவா?' என்று நண்பன் பதறினான். 'இங்க என்ன தோணுதோ (இதயம்) அத பேசுவேன் இங்க என்ன தோணுதோ (மூளை) அத பண்ணுவேன்' எனும் இளைய தளபதியின் வசனத்தை அவனிடம் உதிர்த்தேன். எனக்கும் இதற்கு முன் யாரிடமும் இவ்வாறு பேசி அனுபவமேதும் இல்லை தான். இருந்தாலும் அவளின் பார்வை 'என்னோடு பேசு' என்பது போலவே அழைத்தது. இதற்கு முன்பும் சிலரிடம் பேசாமல் பார்வைகளிலே முடிந்த உறவுகள் ஏராளம். கோபிகிருஷ்ணனின் படைப்புகள் வேறு இவளிடம் பேசிவதில் ஒன்றும்  பிழையில்லை என்ற எண்ணத்தை என்னுள் தோற்றுவித்துக்கொண்டிருந்தது. அதற்கு அவர் காரணம் அல்ல. என் கொழுப்பு தான்.

அவளின் தொலைபேசி எண் திருடியதெல்லாம் தனிக் கதை. அது இங்கு வேண்டாம். இப்படி இப்படியெல்லாம் பேசி அசத்த வேண்டுமென்று பல முறை மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டேன்.
< 
இனி வாட்சப் உரையாடல்:

'ஹலோ'

சில நொடிகள் எந்த பதிலும் இல்லை. இந்த இடத்தில என் இதயம் என்ன செய்து கொண்டிருக்குமென்று நான் வர்ணிக்கத் தேவையில்லை தானே?!

'ஹலோ. சாரி. மே ஐ நோ ஹூ இஸ் திஸ்?'

சந்தோஷமும் சோகமும் ஒரு சேரத் தாக்கியது.

'கருப்பு சட்ட போட்டு ஒரு பையன் உங்கள குறுகுறுன்னு பாத்துட்டு இருந்தானே. அவன் தான்' என்றேன் வெகுளியாக. ஹ்யூமர் முயற்சித்தால் பெண்களுக்கு பிடிக்குமே என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன் போலும்.

'தெரியல. நான் பாக்கலயே'
> 
கதம் கதம். பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ள முடியாதென்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அதன் பின், இப்போதெல்லாம் மருந்துக்கு கூட தரிசனங்கள் கிட்டுவதில்லை.

இரண்டு நாட்களாக ‘பொன்முட்டையிடும் வாத்து கதை’ தான் மனதில் உழன்று கொண்டிருக்கிறது.


- த.ராஜன்

காதலின் துயரம் - கதே

இலக்கியத்தில் காதலின் உணர்சிகளை வெளிப்படுத்திய அளவிற்கு வேறெதுவும் சாத்தியப்படவில்லை என்றே தோன்றுகிறது. மற்றவைகளைப் போன்றே காதலும் பரிணாம வளர்ச்சி அடைந்து பல்வேறு நிலைகளைக் கடந்த போதும் அதன் சுகம் - சோகம் இன்றும் என்றும் அதே நிலைதானோ என்றும் தோன்றுகிறது.

சில அற்புதமான புத்தகங்களின் அறிமுகம் கிடைத்த அனுபவமெல்லாம் விசித்திரமானது. ‘கிளாஷ் ஆஃப் கிளான்ஸ்’ என்னும் மொபைல் கேமின் மூலம் அறிமுகமான நண்பரின் பரிந்துரையில் தான் 'கன்னி' வாசித்தேன். 'கன்னி' ஓர் அற்புதம். அப்படி ஓர் அற்புதத்தை பரிந்துரைத்த அவரின் மற்றொரு பரிந்துரை தான் 'கதேயின் காதலின் துயரம்'. காதலை நேசிக்கும் அனைவருக்கும் இப்புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.

நாவல் வாசித்து முடித்து முன்னுரை வாசித்தால் ஆச்சர்யத்திற்கு மேல் ஆச்சர்யம். இது வெளியான ஆண்டு 1774. இந்தக் குறுநாவல் ஜெர்மன் மொழியின் நவீன புனைகதை வரலாற்றின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. கதே இந்த நாவலை எழுதியபோது அவருடைய வயது 24. மேலும் பல ஆச்சரியங்களைக் இங்கு கூறாமல் விட்டுவிடுறேன். முன்னுரை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

கிரேக்க துன்பியல் நாடகத்தின் சாயலைக் கொண்ட இந்த நாவலின் ஒவ்வொரு வரியிலும் இளமையின் துடிப்பும் வாழ்வின் புதிர்வழிகளில் மாட்டிக்கொண்ட திகைப்பும் காதலின் பித்தும் அது விளைவிக்கும் தனிமையின் துயரமும் வெகு இயல்பாகவும் கூராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது - எம்.கோபாலகிருஷ்ணன்.

கடவுளும் என் தாய் தந்தையரும் எனக்கு உயிரையும் உடலையும் அளித்தனர் எனில் என் வாழ்வை எனக்கு அளித்தவர் கதே. நான் மட்டுமல்ல, தன்னைத் தொட்டவர் எவருடைய வாழ்க்கையையும் பொன்னாக மாற்றாமல் விட்டதில்லை இந்த இரஸவாதி. இந்த நாவலை எழுதிய உடன் உலகப்புகழை எய்துகிறார். ஐரோப்பியா முழுவதும் மனித மனங்களெல்லாம் தீப்பற்றி எறிகிறது. வாழ்ந்தால் வெர்தரைப் போல வாழ வேண்டும் என்று ஐரோப்பிய இளைஞர்களெல்லாம் அந்தக் கதாப்பாத்திரத்தை ஓர் இலட்சிய புருஷனாக கனவு கண்டனர். அதே போல் யுவதிகளெல்லாம் வெர்தர் போன்ற ஒரு லட்சியக் காதலன் தனக்கு கிடைக்க மாட்டானா என்று ஏங்கித் தவித்தனர் - இரா.குப்புசாமி.

இயற்கை அன்னை தன் ரகசியங்களையெல்லாம் வரம்பின்றி வெளிப்படுத்தியது தன் ஒரே மகன் கதே மூலமாகத்தான் – எமர்சன்.

நாவலில் முதல் நாற்பது பக்கங்களில் நான் ரசித்த சில பத்திகளை இங்கே தருகிறேன். வாசித்துப் பாருங்கள்.

மனித ஜீவன்களிலேயே மிக அழகான ஒருத்தியை நான் கண்டேன். எப்படி என்று சரியாக உனக்குச் சொல்வது அவ்வளவு சுலபமானதில்லை. நான் திருப்தியாக சந்தோஷமாக இருக்கிறேன். ஆகவே அதைத் தெளிவாகச் சித்தரிப்பது சாத்தியமில்லை.

தேவதை என்றவுடனேயே சொர்க்கத்திலிருக்கும் அவனது மனைவியைப் பற்றிச் சொல்கிறார்கள். அவனுக்கு அப்படியொருத்தி இருக்கிறாளா? இருந்துவிட்டுப் போகட்டும். இவள் எவ்வளவு அழகானவள் என்றோ ஏன் அத்தனை நேர்த்தி மிக்கவள் என்றோ என்னால் உன்னிடம் சொல்ல முடியவில்லை. என்னை முழுமையாய் ஆட்கொண்டுவிடுமளவு அழகானவள் என்று மட்டுமே என்னால் இப்போது சொல்ல முடியம்.

oOo

பேரன்பும் மனஉறுதியும் உள்ளவள். பரபரப்பான இந்த உலகில் ஆச்சரியமூட்டும் அமைதியும் எளிமையும் கொண்டவள்.

அவளைப் பற்றிய பலவீனமான இந்த எல்லாச் சொற்களும் அவளுடைய உண்மையான இயல்பின் சிறு சாரத்தையும் சொல்ல இயலாத வெற்று உளறல்களே.

oOo

அவளது தன்மையிலும் தோற்றத்திலும் குரலிலும் என் முழு மனமும் ஒன்றியிருக்க நான் அவளுக்கு சம்பிரதாயமான பாராட்டுகளைத் தெரிவித்தேன். அவள் தனது கையுறைகளையும் விசிறியையும் எடுத்து வர அறைக்குள் சென்ற சொற்ப நேரம் ஆச்சரியத்திலிருந்து நான் விடுபட உதவியது.

oOo

இங்கே எப்படி நான் வந்தேன், மலை உச்சியில் நின்றபடி அழகான பள்ளத்தாக்கை எப்படி ரசித்திருக்கிறேன், இங்கே சுற்றியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் என்னை எப்படி வசீகரத்துள்ளது என்பதெல்லாம் பெரும் ஆச்சரியம்தான். அதோ அங்கே அந்தக் குறுங்காடு. நீ அதன் அடர்நிழலில் அமிழ்ந்துவிட முடியுமா? மலைத்தொடர்களும் நெருக்கமான பள்ளத்தாக்குகளும்! அவற்றில் என்னை நான் தொலைத்துவிட முடியுமா? அங்கும் இங்குமாய் நான் தவித்தலைகிறேன். எனக்கு இப்போது என்ன வேண்டுமென்றே தெரியவில்லை.

oOo

நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவனுக்கு லோதே என்னமாதிரி தோன்றுவாள் என்பதை, நோய்ப் படுக்கையில் வாடிக் கிடக்கும் பலரையும்விட மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் என்னுடைய பாவப்பட்ட இதயத்தால் உணரமுடிந்தது.

oOo

திரும்பி வரும் வழியில் இப்படி எல்லா விஷயத்திலும் தேவைக்கதிகமாக ஈடுபாடு காட்டுவதைச் சொல்லி கடுமையாகத் திட்டினாள். இப்படி நடந்துகொள்வது அழிவிலேயே கொண்டுபோய்விடும் என்றும் என்னை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தாள். ஓ என் தேவதையே! உனக்காக நான் உயிர் வாழ்ந்தாக வேண்டும்.

oOo

உண்மையில் சொல்கிறேன், வில்ஹெம், ஞானஸ்நானத்தின் போது கூட அவ்வளவு புனிதத்துவத்தை நான் உணர்ந்ததில்லை. லோதே மேலே வந்தபோது தேசத்தின் பாவங்களையெல்லாம் புனித நீரினால் கழுவிப் போக்கிய ஒரு தேவனின் காலில் விழுவதுபோல அவளது காலில் விழுந்துவிட விரும்பினேன்.

oOo

லோதேவின் பார்வையை நான் யாசித்து நின்றேன். அய்யோ! அந்தக் கண்கள் இங்கும் அங்குமாய் எதை எதையோ பார்த்துக்கொண்டிருக்கின்றன. அவளை மட்டுமே பார்த்தவாறு லயித்து நிற்கிற என் மீது அவளது பார்வை படவில்லை. என் இதயம் அவளுக்கு ஆயிரம் முறையாவது கையசைத்திருக்கும். ஆனால் அவள் என்னைப் பார்க்கவேயில்லை. வண்டி புறப்பட்டு ஓட என் கண்களில் ஒரு துளி கண்ணீர். நான் அவளையே பார்த்திருந்தேன். அவள் பின்னால் திரும்பிப் பார்த்தபோது அவளது தலையலங்காரம் ஜன்னலுக்கு வெளியே தெரிந்ததைப் பார்த்தேன். ஓ! அவள் என்னைத்தான் பார்க்கிறாளா? அப்படித்தானா என்று நிச்சயமாய் சொல்ல முடியாமல்தான் நான் தவித்து நின்றேன். அவள் என்னைத்தான் பார்த்தாள் என்று நினைத்துக்கொள்வதுதான் ஒரே ஆறுதல். இருக்கலாம். இன்றைய இரவு நல்லிரவாக அமையட்டும். நான் எவ்வளவு குழந்தைத்தனமாயிருக்கிறேன்?

oOo

அவளை நான் எப்படி விரும்புகிறேன் என்று யாராவது கேட்கும்போது, விரும்புவது என்கிற அந்த வார்த்தையையே நான் வெறுக்கிறேன். லோதே என்ற தேவதையால் அனுக்கிரகிக்கப்பட்ட இதயம் கொண்ட ஒருவன் அவளை விரும்புகிறேன் என்று சாதாரணமாய் சொல்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்டவனாய் இருக்க வேண்டும். விரும்புவதாம்! முன்பு ஒரு நாள் யாரோ ஒருவன் கவிஞர் ஓசியானை நான் எந்த அளவு விரும்புகிறேன் என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.

oOo

இல்லையில்லை, என்னையே நான் ஏமாற்றிக் கொள்ளவில்லை. கரிய அவள் கண்களில் என் மீதும், என்னுடைய எதிர்காலத்தின் மீதும் ஒரு அக்கறை இருப்பதை என்னால் அறிய முடிகிறது. அவள் என்னைக் காதலிக்கிறாள். ஓ! அவள் என்னைக் காதலிக்கிறாள்.  (இந்த விஷயத்தில் என்னுடைய இதயத்தை நான் நன்றாகவே நம்பலாம்) இந்தச் சொற்களில் உள்ள சொர்க்க சுகத்தை என்னால் வெளிப்படுத்த முடிகிறதா?

என்னை அவள் காதலிக்கிறாள்! என்று நினைக்கும்போதே என் கண்ணெதிரில் எனக்கு நானே எத்தனை மேலானவனாய்த் தெரிகிறேன். ஒருவேளை நான் இப்படி உணர்ச்சிவசப்படுவதை எண்ணி என் மீது நீ பரிதாபப்படலாம். அவள் என்னைக் காதலக்கத் தொடங்கியதிலிருந்து என்னை நானே ஆராதிக்கத் தொடங்கவிட்டேன்.

oOo

எனக்கு அவள் புனிதமானவள். அவள் எதிரில் ஆசைகளனைத்தும் அடங்கிப் போகின்றன. அவளுடன் இருக்கும்போது நான் என்ன நினைக்கிறேன் என்பதே எனக்குத் தெரிவதில்லை. என்னவோ என் இதயம் நரம்புகள் அனைத்திலும் தத்தளிப்பது போலவே இருக்கும்.

oOo

காதலற்ற இதயங்களுக்கு இந்த வாழ்க்கையில் என்ன அர்த்தமிருக்க முடியம், வில்ஹெம்?

oOo

தவிர்க்கமுடியாத ஒரு வேலையினால் இன்று என்னால் லோதேவைப் போய் பார்க்க முடியவில்லை. நான் என்ன செய்ய முடியும்? இன்று அவளிடம் எனக்குப் பதிலாக யாராவது ஒருவர் சென்று என்னை நினைவுபடுத்தட்டும் என்ற எண்ணத்தில் என்னுடைய வேலைக்காரனை அனுப்பினேன். அவன் திரும்பி வருவதற்குள்தான் நான் எப்படித் தவித்துப் போனேன்? மறுபடி அவனைப் பாரக்கத்தான் நான் எத்தனை ஆசையாய் இருந்தேன்? அவனை அணைத்துக்கொள்ள சற்றும் கூச்சப்படாதவனாய் இருந்திருந்தால் நான் அப்படியே அவனைத் தழுவிக்கொண்டிருப்பேன்.

பொலோனா என்ற ஒரு கல்லைப் பற்றிச் சொல்வார்கள். பகலில் அதை சூரிய ஒளியில் வைத்துவிட்டால் சூரியக் கதிர்களை அது உள்வாங்கிக் கொள்ளுமாம். இரவானதும் அது கதிர்களைத் துப்பி ஒளி கொடுக்குமாம். அந்த வேலைக்காரனும் அப்படித்தான். அவனது முகத்திலும், கன்னங்களிலும், கோட்டுப் பொத்தான்களின் மீதும், சட்டையின் கழுத்துப் பட்டையின் மீதும் அவளது கண்கள் வர்ஷித்த உணர்ச்சிகளனைத்துமே மிகப் புனிதமானவை. விலை மதிப்பற்றவை. அந்த கணத்தில் அந்த வேலைக்காரனுக்கு ஆயிரம் பொன் தந்து யாராவது கேட்டிருந்தாலும் நான் அவனை விட்டுத் தந்திருக்கமாட்டேன். அவன் வந்து என் முன்னால் நின்றதுமே நான் அத்தனை சந்தோஷப்பட்டேன். இதைக் கேட்டு நீ சிரிக்காமல் இருக்க கடவுள் அருள் புரிவாராக. இவை எல்லாமே நம்மை மகிழ்விக்கும் சலனச் சித்திரங்கள்தானா வில்ஹெம்?

oOo

அவளை அடிக்கடி பார்க்கக்கூடாது என்று மனத்தில் உறுதி எடுத்துக்கொள்வேன். ஆனால் அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடிந்தால்தானே! ஒவ்வொரு நாளும் என்னுடைய ஆசைக்கு நான் அடிபணிந்துவிடுகிறேன். உடனடியாகவே இன்றோடு சரி, நாளைக்கு அவளைப் பார்க்கக்கூடாது என்று மிக சிரத்தையாக உறுதியெடுத்துக்கொள்வேன். மறுநாள் விடிய வேண்டியதுதான். உடனேயே ஆவலைத் தடுக்க முடியாமல் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு, எனக்குத் தெரியாமலேயே, அவளிடம் போய் நின்றுவிடுவேன். முன்தினம் மாலையில் அவள் 'நாளைக்கு நீங்கள் வருவீர்கள்தானே?' என்று கேட்டிருப்பாள் (அப்படிக் கேட்டபின் யார்தான் வராமல் இருக்க முடியும்?) அல்லது அந்த நாள் மிக ரம்மியமாக அமைந்துவிட நான் வாஹெம்முக்கு நடக்கத் தொடங்கிவிடுவேன். அங்கிருந்து பிறகு அவள் இருக்குமிடத்திற்குச் செல்ல இன்னும் அரை மணித் தொலைவுதானே. அவளது பிரசன்னத்திற்கு வெகு அருகில் எப்போதுமே நான் இருப்பதால் நொடியில் நான் அங்கு போய்ச் சேர்ந்துவிடுவேன். என்னுடைய பாட்டி மந்திர மலையைப் பற்றி ஒரு கதை சொல்லுவாள். அந்த மலையை மிக நெருங்கி வரும் கப்பல்கள் எல்லாமே தமது இருப்புப்பாளங்களையும், ஆணிகளையும் இழந்து மலையை நோக்கி இழுக்கப்பட்டு பரிதாபமாக நொறுங்கி உடைந்து மூழ்கிவிடுமாம்.

oOo

இந்நாவல் ஒரு பொக்கிஷம். கடந்த சென்னைப் புத்தகக்கண்காட்சியில் தூசி படிந்த கடைசி சில பிரதிகளே இருந்தன. உங்கள் கண்ணில் எங்கேனும் பட்டால் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழினி பதிப்பகம் | விலை ரூ 60/-

- த.ராஜன்

Friday, 2 October 2015

இப்ப நான் என்ன செய்ய?

இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அனைவரும் வேறொருவரை மனதில் வைத்து எழுதப்பட்டது. உங்களை நினைவுபடுத்தினால் அது எதேர்ச்சையே. நிர்வாகம் பொறுப்பல்ல ;)
oOo
புத்தகம் இரவல் தருவதிலொன்றும் எனக்கு தயக்கமிருந்ததில்லை. புத்தகம் வாசிப்பவர்களே குறைவு. ஆர்வமாக நம்மிடம் கேட்கும் பொழுது அதை மறுப்பது பெரும்பாவம் தான். ஆனால் வாங்கிச் சென்றவர்களின் செயலோ எல்லையற்ற கோபத்தையும் வருத்தத்தையும் வரவழைக்கக் கூடியதாகவே பெரும்பாலும் இருக்கின்றது. புத்தகத்தின் முனை மடிப்பது, ஆங்காங்கே கிறுக்குவது, புத்தகத்தில் தூசி பூசித் தருவது, பல் குத்த காகிதம் கிழிப்பது என புத்தகம் மீது நடத்தும் வன்முறைக்கு அளவே இல்லை. இதை அவர்கள் வன்முறை என்று அறியாதது தான் வருத்தம்.
இசையைப் பெரிதும் மதிக்கும் இசைக்கலைஞர்கள், அவர்களின் இசைக்கருவியை இசைக்கத் தெரியாதவர்களைத் தொடக்கூட அனுமதிக்க மாட்டார்கள். எனக்கு புத்தகமும் அப்படித் தான். ஆக ‘வாழ்கையில் பணம் யாரிடமும் கடனாக வாங்கக் கூடாதது. புத்தகம் கடனாகக் கொடுக்கக் கூடாதது’ எனும் லதாமகனின் பொன்மொழியைப் பின்பற்ற ஆரம்பித்திருந்தேன்.
இருப்பினும் ஆசையாகக் கேட்பவர்களிடம் மறுக்க முடிவதில்லை. பல்வேறு நிபந்தனைகள் விதித்த பின்பே புத்தகம் வாசிக்கத் தருகிறேன். யாரும் கடைபிடிப்பதாக இல்லை. சிலரோ புத்தகத்தைத் திருப்பித் தருவதே இல்லை. இப்ப நான் என்ன செய்ய?
oOo
சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் நட்பிற்குள் ஏற்பட்ட விரிசல்களில் முக்கிய பங்கு வகித்தது பணம் தான். சில நேரங்களில் கொடுக்க முடிகின்றது. பல நேரங்களில் முடிந்ததில்லை. ஒருவரிடம் வாங்கியதை எப்படி திருப்பிக் கொடுக்காமல் இருக்க முடிகின்றது என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அது பணமாக இருக்கட்டும் அல்லது ஒன்றுக்கும் உதவாததாகக் கூட இருக்கட்டும்.
காதலிக்கு பரிசளிப்பதற்காக மதிமாறன் ஆயிரம் ரூபாய் வேண்டுமென்றான். ஏடிஎம்மில் நுழையவும் ஆயிரத்தி ஐநூறாக கொடுக்கும்படி கேட்டுக்கொண்டான். கொடுத்து நான்கு வருடங்கள் ஆகின்றது இன்னும் வரவில்லை. வினோத் மூவாயிரம் வாங்கி இரண்டாயிரம் மட்டும் திருப்பிக்கொடுத்தான். ஏழு முறை கேட்ட பின்பு தான் இதுவும் கிடைத்தது. ‘இவ்வளவு சம்பாதிக்ற. மூவாயிரத்துக்கு இப்படி அழுவுற’ என்று வியாக்யானம் வேறு. வசந்த் இருபதாயிரம் வாங்கி பத்தொன்பதாயிரம் கொடுத்தான். அத்தை மகள் பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் கல்லூரில் சேர்க்க ஏழாயிரம் வேண்டுமென்றார் அத்தை. ஹோகயா. மகளின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்க அண்ணன் ஒருவனுக்கு ஐநூறு. முருகன் மிகுந்த பணக்கஷ்டத்தில் இருந்ததால் அவன் வாங்கிய சோனி வால்க்மேன்க்கு ஐயாயிரம் எனது கார்டில் உருவப்பட்டது. இரண்டே மாதத்தில் தருகிறேன் என்று லக்ஷ்மி வாங்கிய மூவாயிரம் ரூபாயை மூன்று ஆண்டுகளில் முப்பது முறை கேட்டதால் எனது அழைப்பை தற்போது ஏற்பதில்லை. எம்மீ படிக்கிறேன் என்று சத்யபாமாவில் சேர்ந்து முப்பதாயிரம் தண்டம் கட்டினேன். சில பல சில்லறைக் கடனுதவி.
இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம். அதற்குள் வீடு கட்ட வேண்டுமென அப்பாவின் ஆசை. அனுமானித்ததை விட கூடுதல் செலவு தற்போது. கடன் வாங்குவதில் சிறிதும் உடன்பாடில்லாத நான் இரண்டு லட்சம் ரூபாய் நண்பனிடம் வாங்கியாகிவிட்டது. இன்னும் இரண்டு லட்சத்திற்கு கைக்கு மீறி செலவிருக்கின்றது. என் திருமணத்திற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று பலவாறு கற்பனை செய்த அனேக விஷயங்களைக் கைவிட்டாகிவிட்டது. திருமண நாள் நெருங்க நெருங்க ‘இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ’ என அடி வயித்தில் பீதி கிளம்பத் தொடங்கிவிட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்ப நான் என்ன செய்ய?
oOo
‘இதுவரைக்கும் யாரையுமே லவ் பண்ணதில்லையா’ என்பவர்களிடம் ‘அதுலலாம் உடன்பாடு இல்லங்க – லவ்வுனாலே ப்ராப்ளம் தான் – யாருனே தெரியாத பொண்ண பாத்து பேசி கல்யாணம் பண்றதுல ஒரு கிக்கு’ இப்படி பலவாறு பிட்டு போடுவது வழக்கம். ஆனால் யாருமே என்னை ஏறெடுத்துப் பார்த்ததில்லை என்பது தான் உண்மை.
மே 1, 2015 அன்று பெண் பார்த்து நவம்பர் 22, 2015 கல்யாணம் என உறுதி செய்யப்பட்டது. இந்த ஐந்து மாதங்களில் எத்தனைப் பெண்கள்! அப்பப்ப்பா! காலைத் தேநீர் வேளையில் பார்க்கும் பச்சைப் பெண் (முதல் சந்திப்பில் பச்சை சுடிதார் அணிந்திருந்தாள்) – நான்காவது மாடியின் கண்ணு (செம்ம கண்ணு) பொண்ணு -  பக்கத்துக்கு ப்ளாக்கில் இருந்து வரும் லிப்ஸ்டிக் பொண்ணு – மாலை தேநீர் வேளையில் பார்க்கும் சின் (Chin) பொண்ணு – என் ஆளுடன் தொலைபேசுகையில் பார்க்கும் க்யூட் பொண்ணு – ஸ்கூட்டர் பொண்ணு – தெத்துப்பல் பொண்ணு - நைன்டி பைவ் மார்க் பொண்ணு – சரவணபவனின் தோசைப் (தோசையை இரண்டு கைகளாலும் பிய்த்து சாப்பிடுவதில் கொள்ளை அழகு) பொண்ணு – பெயர் வைக்காத சிறு அழகிகள். இவர்கள் எல்லோரும் என்னைப் பார்க்கிறார்கள் என்பது தான் விஷயம். இப்ப நான் என்ன செய்ய?
- த.ராஜன்

புலி பருகிய அத்திப்பழச்சாறு

நண்பர் புலிக்கு (தீவிர விஜய் ரசிகர் என்பதால் புலி என்றே அழைப்போம்) இன்னும் ஓரிரு மாதங்களில் திருமணம். அவரது காதலி – வருங்கால மனைவி ஏதோ வார இதழில் படித்து இந்தத் தகவலைப் புலியிடம் சூசகமாகச் சொல்லியிருக்கிறாள். அதாவது அத்திப்பழச்சாறில் பல்வேறு விசேஷ குணங்கள் அடங்கியிருப்பதாகவும் அதைத் தினம் பருகினால் திருமண வாழ்வு செழிக்கும் என்றும். புலி தனக்கு திருமணம் என்று நண்பர்களிடம் சொல்லவும் அனைவரும் சொல்லிவைத்தார் போல அத்திப்பழச்சாறு பருகச் சொல்லவும் புலியின் தீவிரம் விரித்தியடைந்தது.
ஆக காலைக்கடன்களின் பட்டியலில் அத்திபழச்சாறையும் சேர்த்துக்கொண்டார் புலி.
இக்கதையை எழுதுவதற்கு காரணம் அத்திப்பழச்சாறின் ப்ராண்ட் அம்பாசிடராக புலி மாறியது தான். புலியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எங்களைக் கொடிய முறையில் மனச்சலவை செய்து கொண்டிருந்தார். மாதுளை சாப்பிடச் சொல்லி சத்யா சொல்ல, அதை மறுத்து அடுத்த நொடியே ‘மை வோட் இஸ் பார் ஃபிக்’ என்றார் புலி. மாதுளை சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் சீரும் சிறப்புமாக இருக்கும் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் புலி சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. ‘பார்த்து புலி. தினமும் அத்திப்பழச்சாறு சாப்பிட்டு இரத்தத்திற்கு பதில் வேறு எதுவும் ஓடப் போகிறது’ என்ற கலாய்ப்பிற்கெல்லாம் மசிந்ததாகத் தெரியவில்லை. கண்ணன், ‘தன் தாத்தாவின் ஊரில் அத்திப்பழம் நுகர்ந்து பார்க்கக் கூட கிடைக்காது என்றும் அவருக்கு பதினேழு குழந்தைகள் என்றும் சொல்லி, அத்திப்பழச்சாறு பருகாமலே இது எப்படி சாத்தியமாயிற்று’ என்று கேள்வி எழுப்பினான். புலி சிரித்து மழுப்பினார்.
அத்திப்பழச்சாறு தாயார் செய்து தரும் ஜூஸ் மாஸ்டரை தெய்வத்திற்கு நிகராக நடத்தினார் புலி. ‘ஜாதா ப்ரூட். சோட்டா பானி’ என்னும் மந்திரத்தை தினமும் ஜூஸ் மாஸ்டரின் காதில் ஓதுவது வழக்கம். தினமும் இவர் பருகுவதைப் பார்த்து ஜூஸ் மாஸ்டர் என்ன நினைத்தாரோ நாளாக நாளாக நீரின் அளவு அத்திப்பழச்சாறில் அதிகமாகிக்கொண்டிருந்தது. ‘கல்யாணத்திற்கு பின் ஏதேனும் நேர்ந்தால் ஜூஸ் மாஸ்டர் தான் பொறுப்பு. இந்தப் பாவம் ஜூஸ் மாஸ்டரைச் சும்மா விடுமா?’ என்று வெறி கொண்ட வேங்கையானர் புலி. புலி கோபப்பட்டு அன்று தான் பார்க்கிறோம். கோபம் என்பதை விட அறச்சீற்றம் எனலாம். எப்படியாவது தான் அத்திப்பழச்சாறு பருகுவதன் காரணத்தை ஹிந்தியில் ஜூஸ் மாஸ்டரிடம் சொல்லிவிட வேண்டுமென்று ஆவேசமானார்.
தினமும் அத்திப்பழச்சாறு பருகுவதால் நேரும் பக்கவிளைவை புலி அறிந்திருக்கவில்லை. அது பற்றி புலியின் காதலி வார இதழில் வாசித்த ‘அத்திப்பழச்சாறும் ஆண்மை வீரியமும்’ என்ற கட்டுரையிலேயே ஒரு ஸ்டார் போட்டு கீழே  குறிப்பிடப்பட்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை.
அந்தக் குறிப்பு:



அக்குறிப்பு இருந்த பகுதியைக் காதலியின் தாத்தா காது குடையக் கிழித்துச் சென்றதால் ஆவணப்படுத்த இயலவில்லை. மன்னிக்கவும்.
- த.ராஜன்