Showing posts with label ஜெ.பிரான்சிஸ் கிருபா. Show all posts
Showing posts with label ஜெ.பிரான்சிஸ் கிருபா. Show all posts

Tuesday, 17 February 2015

கன்னி – காதலர் தினக் கொண்டாட்டம்

காதல் என்பது ஒரு சந்திப்பு
காதல் என்பது ஒரு கண்டுகொள்ளல்
காதல் என்பது இறையனுபவம்
காதல் என்பது ஒரு குதூகலம்
காதலுக்கு காலம் கிடையாது
எந்த சொற்களாலும் உணர்த்திவிட முடியாதது அது
காதல் மட்டுமே காதலை அறியும்
காதல் கொண்ட இதயத்தில்
காதல் மட்டுமே இருக்கிறது
- தேவதேவன்

'கன்னி' நாவலில் எந்த அளவிற்கு காதல் கொண்டாடப்படுகிறதோ அதைப் போலவே 'கன்னி' நாவல் மீதும் அதன் வாசகர்கள் காதல் கொள்வார்கள்.  வாசகசாலையின் மூன்றாம் நிகழ்விற்காக 'கன்னி' நாவலைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். காதலர் தின சிறப்பு நிகழ்வாக. நாவல் வெளிவந்து எட்டு ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரை ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை என்று கவிஞர் சாம்ராஜ் கூறினார். கொண்டாடப்படவேண்டிய நாவலையும் எழுத்தாளரையும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தது வருத்தமான விஷயம். சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களின் பேருதவியால் இந்த நாவல் பரந்த கவனம் பெற்று, தற்போது இரண்டாம் பதிப்பும் வந்திருப்பது சற்று ஆறுதலான செய்தி.

வாசிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் தவர விடக்கூடாத முக்கியமான புத்தகம் இது. இதுவரை வாசிக்காதவர்கள் நிச்சயம் வாங்கி முயற்சித்துப் பாருங்கள்.


கன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா
தமிழினி பதிப்பகம்
விலை – 380/-

கிருபா பற்றி ஜெயமோகனின் கூற்று: ஜெ.பிரான்ஸிஸ் கிருபா தமிழின் இன்றைய மிக முக்கியமான இளம்படைப்பாளி. சொல்லப்போனால் தனக்கென தனி புனைவுமொழி கொண்ட சமகால இளம்தமிழ் எழுத்தாளர் இவர் ஒருவரே. பித்தின் வேகத்தை அபாரமான சொல்லாற்றலால் பிந்தொடரும் வல்லமை கொண்டவர் கிருபா. அவரது நாவலான ‘கன்னி’ [தமிழினி வெளியீடு] இதற்கு சிறந்த உதாரணம். - ஜெயமோகன் (September 22, 2008)

வாசகசாலையின் இந்நிகழ்வைக் கேள்விப்பட்டவுடன் அருணைத் தொடர்பு கொண்டு 'எப்படியாவது கிருபாவ நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு வாங்க' என்றேன். 'எதாச்சும் எடுபுடி வேல இருந்தாலும் சொல்லுங்க. நான் பண்றேன்' என்றேன். அவருக்கு எப்படித் தோன்றியது என்று தெரியவில்லை, 'வாசகர் பார்வைல நீங்க பேசுறீங்களா' என்றார். இதற்கு முன் எந்த வித அனுபவமும் இல்லையெனினும் எதுவும் யோசிக்காமல் 'கண்டிப்பா. அது என்னோட பாக்கியம்' என்றேன்.

ஆக மேடையேறி புத்தகம் பற்றி பேசும் முதல் வாய்ப்பு கிடைத்தது.


அந்நிகழ்வில் நான் பேசிய உரை. முதல் உரை :)

கன்னி. என்னோட முதல் உரையும், முதல் உரையோட முதல் வார்த்தையும் கன்னியா இருக்றதுல ரொம்ப சந்தோஷம்.

எல்லாருக்கும் வணக்கம்.

லாஸ்ட் இயர் தான் கன்னியோட அறிமுகம் கெடச்சது. கன்னி வாசிச்ச அப்புறம் ஃபேஸ்புக்குல இல்ல வேற எங்கயோ கன்னி பத்தி யார் பேசினாலும் அப்டியே பரவச நிலைக்கு வந்துடுவேன். எப்படி நம்ம கங்கா, சந்திரமுகி அறைக்கு போனாங்கன்னா அப்டியே சந்திரமுகியா மாறி முகம்லாம் பிரகாசமா ஆயிடுமோ - அந்த மாதிரி கன்னினு எங்க பேசினாலும் ப்ரைட்டா ஆயிடுவேன். அதனால தான் மேடை பேச்சுக்கு எந்த அறிமுகமும் இல்லனாலும் அருண் கேக்கவும் அடுத்த நிமிஷமே எதயும் யோசிக்காம ரொம்ப சந்தோஷம், கண்டிப்பா பண்றேன், இது என்னோட பாக்கியம் அப்படின்னு சொன்னேன். அவருக்கு என் கிட்ட எப்படி கேக்கணும்னு தோணுச்சோ தெரியல. எல்லாம் கன்னியின் கிருபைன்னு நெனைக்கிறேன். நன்றி அருண்.

லாஸ்ட் இயர் தான் கன்னியோட அறிமுகம் கெடச்சது. கன்னி வாசிச்சிருந்த சமயம். ஒரு சில படைப்ப வாசிக்கும் போது தான் எழுத்தாளார்ட்ட போய் பேசனும் அவங்கள அப்ரோச் பண்ணனும்னு ஆசை இருக்கும். கன்னி படிச்ச உடனேயும் எப்டியாவது பிரான்சிஸ் கிருபாவ பாத்து பேசனும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு. இன்னைக்கு அந்த ஆச நிறைவேறிடும்னு நெனச்சேன். ஆனா அவரால வர முடியாம போனது ரொம்ப வருத்தம். எப்படியாவது பெர்மிசன் கேட்டு அவர் பக்கத்துல இன்னைக்கு உக்காரானும்னு நெனச்சேன். பிரான்சிஸ் கிருபாவ பாக்கணும்கிறத விட அமலா அக்காவ பாக்கனும்னு தான் ரொம்ப ஆசை. இந்த நாவல வெறும் புனைவா மட்டும் என்னால பாக்க முடியல. கிருபா சார் வந்தார்னா அமலா அக்காவோட போட்டோ மட்டுமாச்சும் காட்டுங்கனு கேக்கலாம்னு இருந்தேன். மிஸ் ஆயிடுச்சு.

லாஸ்ட் இயர் கன்னி வாசிச்சி முடிச்சிருந்த நேரத்துல தான் ஈரோடு புக் ஃபேர் வந்துச்சு. அப்போ தமிழினி பதிப்பகம் போய்ருந்தேன். சு.வேணுகோபால் சார் இருந்தார் அங்க. அவங்கட்ட கிருபா சார் நம்பர் இருக்குமானு கேட்டேன். அவர் தேடி பாத்துட்டு எங்கிட்ட இல்ல, வசந்தகுமார் வருவார் அவர்கிட்ட கேட்டு பாருங்கன்னு சொன்னார். சுத்திட்டு லாஸ்ட்டா மறுபடியும் தமிழினி பதிப்பகம் வந்து, வசந்தகுமார் சார மீட் பண்ணேன். அப்போ அவர் கிட்ட கேட்டேன், இந்த மாதிரி பிரான்சிஸ் கிருபாவோட நம்பர் கிடைக்குமானு. அவர் உடனே எதுக்குப்பா அப்டின்னார். கன்னி வாசிச்சேன். ரொம்ப புடிச்சிச்சு. அதனால அவர்கிட்ட பேசலாம்னு. ஓ கன்னி ரீடரா, வாங்க வாங்க இங்க உக்காருங்க சொல்லிட்டு ரொம்ப நேரம் கன்னி பத்தி பேசிட்டு இருந்தோம். நம்பர் கெடைக்கல. தர மாட்டேன்னு சொல்லிட்டார். உனக்கு படைப்பு தான் முக்கியம். படைப்பாளி தேவ இல்ல. அதனால நீ பேசனும்னு நெனைக்காதனு சொல்லிட்டார். அப்புறம் நாலஞ்சு புக்கு சஜ்ஜெஸ்ட் பண்ணார். இப்போ என்கிட்ட காசு இல்ல. ஏடிஎம் போய் எடுத்து வரேன்னு சொன்னேன். என்னப்பா நீ கன்னி ரீடர்னு சொல்ற. வேணுங்றத எடுத்துட்டு போ. நீ சென்னை வரும் போது கொடு. தராட்டியும் பரவா இல்லன்னு சொன்னார். கன்னி வாசகரா இருக்றதுல ரொம்ப பெருமையா இருந்துச்சு அப்போ.

நான் வாசிச்ச புக்குல கன்னி எனக்கு ரொம்ப நெருக்கமான புத்தகம். ரெண்டாயிரத்து பதினஞ்சு ந்யூ இயர் அன்னைக்கு கன்னி வாசிக்கணும்னு இருந்தேன். லாஸ்ட் இயர் வாசிச்த்துல கன்னி தான் டாப் லிஸ்ட்ல இருந்துச்சு. அப்புறம் ரெண்டாயிரத்து பதினஞ்சுலயும் கன்னி பெஸ்டா இருக்க வேண்டாம்னு லாஸ்ட் டிசம்பர்லயே வாசிச்சிட்டேன். வாசிச்சி முடிச்சிட்டு அத பத்தி ஒரு போஸ்ட் போட்டிருந்தேன் புத்தகக் கண்காட்சி க்ரூப்ல. அப்போ கவிதா சொர்ணவல்லி அக்கா - அவங்க கன்னியோட வெறித்தனமான விசிறி - அவங்களும் கன்னி பத்தி எந்த போஸ்ட் பாத்தாலும் பரவச நிலைக்கு வந்துடுவாங்க. எப்டியாவது இந்த புத்தகக் கண்காட்சில தமிழினி வசந்தகுமார பாத்து பேசி ரெண்டாம் பதிப்பு கொண்டு வர சொல்லலாம்னு பேசிட்டு இருந்தோம். இன்கேஸ் அது முடியாத பட்சத்துல நம்ம கன்னி பதிப்பகம்னு ஆரம்பிச்சு கொண்டுவந்துரலாம்க்கா அப்டின்னேன். பேசின ரெண்டாவது நாள்லயே கன்னியோட ரெண்டாவது பதிப்பு வர்றதா ந்யூஸ் வந்துச்சு. ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

பிப்ரவரி ஃபோர்‌டீன்த். இது வந்து எனக்கு இருபத்தி ஆறாவது பிப்ரவரி ஃபோர்‌டீன்த். ஒவ்வொரு வருஷமும் ரொம்ப சோகமாவும் ஏக்கமாவும் தான் போய்ட்டு இருந்துச்சு. இந்த வருஷமும் அப்டி தான் இருந்துருக்கும். அடுத்த வருஷம் வேற யாரோடயோ இல்ல அதுக்கு அடுத்த வருஷம் வைஃப்போடயோ கொண்டாடலாம். ஆனா இது தான் என்னோட பெஸ்ட் பிப்ரவரி ஃபோர்‌டீன்த்தா நினைக்கிறேன்.

நாவல் பத்தி நான் பெருசா ஏதும் பேச போறது இல்ல. இது வரைக்கும் மூணு தடவ வாசிச்சாலும் வெறும் அழகியல மட்டும் தான் பாத்துருக்றேன். நிறய பேரு இதுல படிமம் குறியீடுலாம் இருக்கு - மஞ்சள் சுடிதார் சிகப்பு வளையல் அப்டினுலாம் பேசுறாங்க. அந்த அளவுக்கு நான் போகல. ஒரு ஆசை இருக்கு - இன்னும் நாலஞ்சு முறை வாசிச்ச அப்புறம் இந்த நாவல் பத்தி நூறு பக்கம் எழுதனும்ன்னு.

மனோஜ் சார் பேசும் போது சொன்ன மாதிரி ஒவ்வொரு வரியும் மெனக்கிட்டு எழுதிருப்பார். அட்டகாசமான நடை. ஒரு விஷயத்த அவர் பாக்ற விதம், அவரோட கற்பனையே அட்டகாசமா இருக்கும். எனக்கு ஹைலைட் பண்ற பழக்கம் இருக்கு. என் புக்ல பாத்தீங்கன்னா ஃபுல்லா ஆரஞ்சு கோடா இருக்கும். எக்ஸ்ஸாம்பில்க்கு ஒன்னு சொல்லனும்னா பொண்ணோட நெற்றில ஒரே ஒரு மழைத்துளி இருக்கும். அத அவர் ரொம்ப அற்புதமா சொல்லிருப்பார். எப்டி சொல்லிருப்பார்னா - மழை வந்திருக்குமோ, மழை வருகிறதே என்று அவள் வானத்தை முகம் நிமிர்த்தி பார்த்திருப்பாளோ, அப்போது மழையின் முதற் துளி நெற்றிப் பொட்டில் விழுந்திருக்குமோ, ஐயோ இவள் நனைந்து போவாளே, துளிகளின் தொடர் தெரிப்பில் உடல் கன்றிப் போவாளே என்று இந்த முதற் துளி அலறிக் குரல் கொடுத்திருக்குமோ, அதைக் கேட்டு வானம் இரக்கப்பட்டு ஒரு துளியோடு மழை பொழிவதை நிறுத்தியிருக்குமோ, ஒரு முழு மழையின் ஏக்கத்தை இந்தத் தனித்துளி தாங்கி நிற்கிறதா.

அப்புறம் சங்க இலக்கியம். சங்க இலக்கியம் வாசிக்கணும்னு ரொம்ப ஆசை. சாகுறதுக்கு முன்னாடி சங்க இலக்கியம் வாசிச்சிட்டு சாகணும். நாவல்ல அங்கங்க சங்க இலக்கியத்துல இருந்து எடுத்து எழுதிருப்பார். அது சும்மா ஃபோர்ஸ் பண்ணிலாம் வச்ச மாதிரி இருக்காது. எனக்கு அவர் சொல்ற சில விஷயம் புரியாது. இருந்தாலும் சங்க இலக்கியத்த பாக்கும் ஒரு சந்தோஷம். நாவல்ல அமலா அக்கா பிஎச்டி பண்றதுக்காக பாண்டி சங்க இலக்கியம் படிக்கும் போது சில விஷயத்த கத்துக்கிட்டேன் - நாம எழுதுறதுலாம் கவிதையான்னு கத்துக்கிட்டேன்னு எழுதிருப்பார். அப்போ எனக்கு தோணுச்சு - நெறய பேர் புக் ஃபேர் வருதுங்கிறதுக்காகலாம் புக் எழுதுறாங்க. அவங்களாம் கன்னி நாவல் வாசிக்கும் போது குற்ற உணர்ச்சிக்கு நிச்சயம் ஆளாவங்க. எழுத்துக்காக எவ்வளவு எஃபர்ட் போடணும்னு புரிஞ்சிப்பாங்க.

நாவல் முழுக்க காதல் தாங்க இருக்கு. காதல அதீத அன்பா பாக்றேன். பாண்டிக்கு ஜிம்மி மேல ஜிம்மிக்கு பாண்டி மேல - பாண்டி அமலா - அமலா பாண்டி – சாரா, பாட்டி, பரிமளம், கவிதை, கடல் இப்படி எல்லா விஷயத்துலயும் அதீத அன்ப இந்த நாவல்ல தொட்ருக்கார்னு நெனைக்கிறேன்.

நாவல்ல முதல் சாப்டர்லயே பாண்டி பைத்தியம்க்றதால சங்கிலி கட்டுறதுக்காக ஆசாரி இன்னும் நாலஞ்சு பேர் வருவாங்க. வரும் போது ஜிம்மி அவங்கள பாத்து குரச்சிட்டே இருக்கும். அப்போ ஜிம்மி ஆசாரி மேல பாஞ்சிடும். அந்த இடத்துல ஜிம்மிக்கு பாண்டி மேல இருக்ற அன்போட உச்சம் தெரியும். அதே மாதிரி பைத்தியமா இருப்பார் பாண்டி - ஜிம்மிய அடிக்கிறாங்கன்ன உடனே - அப்படியே முனகுவார் ஜிம்மிய அடிக்காதீங்க ஜிம்மிய அடிக்காதீங்கனு. ரொம்ப நெகிழ்ச்சியான இடம்.

ஆசாரி பாண்டி வீட்டுக்கு வருவார் பாண்டிக்கு சங்கிலி செய்றதுக்காக. அப்போ பாண்டி மரியாதை இல்லாம ஆசாரிய பாத்து இங்க வா, நீயாவது கட்ட அவுத்துவிடேன்னு சொல்லி அம்மாவ கெட்ட வார்த்தைல திட்டுவார். அப்போ ஆசாரி கேப்பார் நீங்க பெத்த புள்ளையாம்மா இப்படி பேசுதுனு. உடனே அம்மா அழுதுட்டே சொல்வாங்க - இல்லையா இது என் புள்ள இல்ல, என் புள்ள மாதிரி இருக்ற யாரயோ கட்டி போட்டிருக்காங்கன்னு. அங்கங்க அம்மாவோட வலிய சொல்லிருப்பார். அதே மாதிரி பாட்டி. பாக்கியம் பாட்டி. பாண்டிக்கு இப்டி ஆன அப்புறம் நடை பொணமா தான் சுத்திட்டு இருப்பாங்க. வீட்லயே இருக்க மாட்டாங்க. யார் கிட்டயும் சரியா பேச மாட்டாங்க. எப்பவும் கணவரோட கல்லறைல தான் போய் இருப்பாங்க. அவங்க பாண்டிக்கிட்ட பேசுற மாதிரி ஒரு இடம் வரும். பாட்டி பாண்டியோட கன்னத்த புடிச்சி கேப்பாங்க - கண்ணுல படம் படமா தெரியுதோய்யா, யாரும் இங்க வந்துரு வந்துரு கூப்ட்ராங்களோ, ஜல் ஜல்ன்னு மணி சத்தம் கேக்குத்தோய்யா. இந்த மாதிரி இடம்லாம் வாசிக்கும் போது அவ்ளவ் வலிய உணர முடியும்.

அமலா அக்கா. எனக்கும் அவங்கள அக்காங்கிற மாதிரி தான் தோணும். நோட்ஸ் எடுக்கும் போது கூட அமலா அக்கான்னு தான் எழுத முடியுது. சின்ன வயசுல இருந்தே அமலா அக்கா கூடவே தான் பாண்டி இருக்றான். நிழல் மாதிரி. அந்த சாப்டரே இப்படித் தான் ஆரம்பிக்கும். பாண்டிக்கு அக்கா இல்லயேங்க்ற ஏக்கம் பயங்கரமா இருக்கும். பெரியம்மா பொண்ணுங்க நாலு அக்கா இருப்பாங்க. அமலா அக்கா தான் குட்டி அக்கா. பாண்டி அமலா அக்காட்ட சத்தியம் வாங்குறான். நான் உன் தம்பி தானக்கா, நீ என் அக்கா தானக்கான்னு. குட்டி அமலா அக்கா சத்தியம் பண்றாங்க நீ என் தம்பி தான்டான்னு. அவன் வீட்ல இருக்ற நேரத்த விட அக்கா கூட இருக்ற நேரம் தான் அதிகம். ஸ்கூல்ல மான திருடிட்டான்னு அக்காவ நெனச்சி தான் பயப்படுவான். அக்காட்ட இத சொல்லாமயும் இருக்க முடியாது. அக்காக்கு தெரிஞ்ச அப்புறம் கோவிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு இனி இப்படி பண்ண கூடாதுன்னு சத்தியம் வாங்குவாங்க. ஒன்னாவே தான் இருப்பாங்க. வீட்ல திருட்டுத் தனமா மெக்ரோன் திருடி சாப்டுவாங்க. அக்கா புது நன்மை வாங்கும் போது குட்டி தேவதை மாதிரி இருப்பாங்க. அக்கா கூட நின்னு ஃபோட்டோ எடுத்துக்கணும்ன்னு ஆசப்படுவான். இவனுக்கு சைக்கிள உருட்ட மட்டும் தான் தெரியும். ஆனா அக்காக்கு கத்துக் கொடுப்பான். ஒரு கட்டத்துல ஊருக்கு போய்ட்டு வந்திருக்கும் போது அக்கா தாவணில மாறிருப்பாங்க. பயம் வந்துடும் பாண்டிக்கு இனிமேல் அக்கா சரியா பேச மாட்டாங்களோன்னு. ஆனா அடுத்த கொஞ்ச நேரத்துலயே அக்கா சகஜமா பேசி நான் எப்பவும் உன் அக்கா தான் அப்டிங்கிற மாதிரி பேசுவாங்க. அந்த சாப்டர் முடியிற போது அக்கா கன்னியாஸ்திரி படிக்கிறதுக்கு கெளம்புவாங்க. ஒரு பக்கம் தான் இருக்கும். அவ்ளவ் பெயின்ஃபுல்லா இருக்கும். அதுக்கப்புறமும் அடிக்கடி சந்திச்சிட்டு இருப்பாங்க ரெண்டு பேரும். அவன் அமலதாஸ்ங்ற பேர்ல கவிதை எழுதுவான். அக்கா திட்டுவாங்க அது சரியா இருக்காதுன்னு. அப்புறம் அமலா அக்காட்ட குழந்தைக்கு பேர் வைக்க சொல்லி ஒருத்தர் வரும் போது அமலதாஸ்ன்னு அக்கா சொல்வாங்க. அக்கா என்ன தான் இன்டெலெக்சுவலா பேசினாலும் அவங்களுக்குள்ள இருக்ற வலி அவங்களயும் மீறி அங்கங்க வந்துடும். முத்து இல்லாத கொலுசு போட்டிருப்பாங்க. அப்போ பாண்டி கிண்டல் பண்ணுவான் சிணுங்காத கொலுசு அப்டின்னு. அப்போ அக்கா கேப்பாங்க என்னடா கடல்ல போட்றலாம்னு சொல்றியா, இனி நான் தான்டா விழனும்ன்னு. அக்கா கன்னியாஸ்திரி ஆகுற டைம் வந்துடும். இனி அக்கா நம்ம கூட இல்லங்கிற ஸ்டேஜ். பேஜ் நம்பர் 246ல இருந்து 250 வர. அந்த பக்கம்லாம் வாசிச்சிட்டு கொஞ்ச நேரம் எதுவும் ஓடாது. அக்கா நினைவா அவன் கிட்ட ஒரு சிலுவ மட்டும் இருக்கும். அத அக்கா கேப்பாங்க. அப்போ வேணாம்க்கா, இது என்னோட சாந்தக்ரூஸ்னு சொல்வான். இப்படியே இருக்காதடா அப்புறம் பைத்தியம் ஆயிடுவடானு சொல்லி அழுவாங்க. நீ நல்லா இருக்கனும்டான்னு சொல்லிட்டு கெளம்பிடுவாங்க.

என்ன பொருத்தமட்டுல பாண்டி இங்கயே பைத்தியம் ஆயிட்டான். இனி சாரா வந்து தான் இவன பைத்தியம் ஆக்கணும்னு இல்ல. அக்கா இனி நம்ம வாழ்க்கைல இல்லனு ஆயிடுச்சு. அப்போ இப்படி ஒரு வரி வருது.

பரந்து விரிந்த கடலின் முன்னே எல்லையில்லா வானத்தின் கீழே நிழலன்றி எதுமற்று நின்றிருந்தான்.

நன்றி வணக்கம்.


மொக்கையாகத் தோன்றினாலும் வரலாறு முக்கியம் என்பதால் இந்தப் பதிவு :D நடந்த நிகழ்வு முழுவதையும் பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியிருந்தேன். இதற்கே மூச்சு தள்ளிவிட்டது. எப்படித் தான் ஜெயமோகன் தினம் தினம் அவ்வளவு பெரிய பதிவெழுதுகிறாரோ!

பிரான்சிஸ் கிருபாவைத் தெரிந்தவர்கள் அவரைப் பற்றி நிறைய விஷயம் சொன்னார்கள். அப்போது கிருபாவின் ஒரு கவிதை தான் ஞாபகம் வந்தது.

மெசியாவின் காயங்கள்
உயிர்பிரியும் கணத்தில்
தம் காயங்களை
கடைசியாய் பார்வையிட்ட
மெசியாவின் கண்களை
பல நூற்றாண்டுகள் கழித்து
இன்று சந்தித்தேன்
கடற்கரையில்
மடித்த கைப்பைகளுடன்
சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு
மத்தியில் மல்லாத்திவிட்டு
தன் வயிற்றில் இறங்கி
முழுவட்டமடித்த கத்தியை
தலை தூக்கி எட்டிபார்த்தது
ஆமை
- ஜெ.பிரான்ஸிஸ் கிருபா

- த.ராஜன்

Saturday, 11 October 2014

கன்னி – II


கடந்த வாரம் சேலம் சென்றிருந்தேன். அண்ணனின் மகனுக்குப் பிறந்தநாள் விழா. ஈரோட்டில் புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டதும் அங்கு செல்ல வேண்டுமென்ற ஆவல் தொத்திக் கொண்டது. சென்னையில் கிடைக்காத புத்தகமா இங்கே கிடைக்கப் போகிறதென்று அண்ணியும் பெரியம்மாவும் அங்கே செல்வதைத் தடை செய்ய முயற்சி செய்தார்கள். அவ்வளவு புத்தகங்களுக்கு மத்தியில் நிற்பதே பரமசுகம். ஏற்கனவே வாசிக்காத பல புத்தகங்கள் இருப்பதால் இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கலாம் என்று சென்றேன்.

காலச்சுவடு பதிப்பகத்தில் தளவாய்சிங்கத்தின் முழுத் தொகுப்பும் 60% கழிவில் கிடைத்தது. அதையும் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலையும் வாங்கிக் கொண்டு தமிழினி பதிப்பகத்தில் ஜெயமோகனின் ‘காடு’ நாவல் வாங்கச் சென்றேன். இது நான் திட்டமிட்டு வாங்கலாம் என்றிருந்த புத்தகம். ‘காடு’ நாவலின் அருகே சு.வேணுகோபாலின் ‘ஒரு துளித் துயரம்’ என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்ததால் அதையும் வாங்கிக் கொண்டு பில் போடச் சென்ற போது தான் எனக்கான இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

"ஒரு துளித் துயரம் வாசிச்சிருக்கீங்களா?" என்றார்.

"இல்ல சார், இந்த புக் பத்தி ஃப்ரண்ட் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்"

"அந்த புக்க எழுதினது நான் தான்"

"சார்ர்ர்ர்!"

எனது சந்தோஷத்திற்கு அளவே இல்ல. இதற்கு முன் அவர் புத்தகம் ஏதும் வாசித்திருந்தால் அதைப் பற்றி சிறிது நேரம் அவரோடு உரையாடியிருக்கலாம்.

அவரிடம் ‘ஒரு துளித் துயரம்’ புத்தகத்தில் கையெழுத்து வாங்கி விட்டு "ஃப்ரான்சிஸ் கிருபாவோட ‘கன்னி’ நாவல் இப்போ எங்கயுமே கிடைக்கிறது இல்லையே? அடுத்த பதிப்பு போடலயா சார்?" என்றேன்.

"அடுத்த வருஷத்துல வந்துடும்னு நினைக்கிறேன்"

"சார், ஃப்ரான்சிஸ் கிருபாவோட நம்பர் இருந்தா கிடைக்குமா?"

அவரது மொபைலில் நம்பரைத் தேட ஆரம்பித்ததும் மனம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. ரசித்து வாசித்த நாவலின் நாயகனிடம் பேசப் போகிறோம் என்ற குதூகலம்.

என் துரதிர்ஷ்டம் அவரிடம் கிருபாவின் எண் இல்லை. "இங்க காஷியர் ஒருத்தர் இருப்பார். சாப்பிட போய்ருக்கிறார். கொஞ்ச நேரத்துல வந்துடுவார். அவர் கிட்ட கேட்டுப் பாருங்க. கிடைக்கும்" என்றார்.

அவரது (சு.வேணுகோபால்) மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

வேறு சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு மறுபடியும் தமிழினி பதிப்பகம் வந்த பொழுது அந்தக் காஷியர் (தமிழினி பதிப்பகத்தின் உரிமையாளர் என்பதைப் பிற்பாடு தெரிந்து கொண்டேன்) இருந்தார்.

கடையில் அதிகக் கூட்டம் இருந்ததால் என்னைக் கண்டுகொள்ளவில்லை. அவர் பார்க்கும் பொழுது இன்முகத்துடன் இருக்கவேண்டுமென்றெண்ணியதால் சிரித்துக் கொண்டே இருந்தேன். அவர் என்னை ஏறிட்டுப் பார்க்கவும் தலைவரைப் பார்த்ததும் அசடு வழிந்து சிரிக்கும் தொண்டனைப் போல ஒரு எக்ஸ்‌ப்ரெஷன் கொடுத்தேன்.

"சொல்லுங்க" என்றார்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வேணுகோபால் சார்கிட்ட பேசிட்டு இருந்தேன். அவங்க கிட்ட ஃப்ரான்சிஸ் கிருபாவோட நம்பர் கேட்டேன். உங்ககிட்ட கேக்க சொன்னாங்க"

"எதுக்குப்பா நம்பர்?"

"அவரோட கன்னி நாவல் வாசிச்சேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அதான் அவர் கிட்ட பேசலாம்னு"

"ஓ... கன்னி வாசிச்சிருக்கீங்களா? எப்படி இருந்துச்சு?"

"இதுவரைக்கும் நான் வாசிச்சதுலயே பெஸ்ட் கன்னி தான் சார்"

"ம்ம்ம்ம். கிருபா எனக்கு ஃப்ரண்ட் தான். அவனத் தான் நானும் தேடிட்டு இருக்கிறேன். அவன் நம்பர் உங்களுக்கு கிடச்சாலும் அவன் கிட்ட பேசாதீங்க"

அதிர்ச்சியுடன், "ஏன் சார் இப்டி சொல்றீங்க?" என்றேன்.

"பேசவேணாம்ப்பா. அது உனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது"

“…………”

"கன்னி நாவல் எல்லாம் புரிஞ்சதா?"

"அந்த நாவல முழுசா புரிஞ்சுக்க முடியல. எனக்கு நிறய சந்தேகம் இருந்துச்சு"

அவசரமாய் "வாங்க வாங்க. இங்க உக்காருங்க. பேசுவோம். என்ன சந்தேகம் சொல்லுங்க?"

"சந்தேகம்னு சொல்றத விட நான் புரிஞ்சது சரியான்னு தெரியனும். நாவல் முழுக்க வந்த அமலா, கடைசில காணாம போய்ட்ராங்க. கடைசி சேப்டர் ஃபுல்லா சாரா. சாராக்கும் அமலாக்கும் நிறய ஒற்றுமை இருக்கு. அதனால அமலாவும் சாராவும் ஒன்னுனு தோணுது"

"ச்சே  ச்சே அதெல்லாம் இல்லவே இல்ல. சாரா வேற. அமலாக்கும் பாண்டிக்கும் காதல் கிடையாது"

“அப்படி  அமலாவும் சாராவும் ஒன்னு இல்லனு சொன்னாலும், அமலா மேல இருந்த காதல் தான் உடனே பாண்டிக்கு சாரா மேல வந்துச்சு"

"அந்த புக்ல அவங்க ரெண்டு பேருக்கும் காதல்ன்னு எங்க வருது சொல்லுங்க?"

"எங்கயும் நேரடியா இல்ல. ஆனா மறைமுகமா அவர் நிறய இடத்துல சொல்றார்"

"ம்ம்ம் ஹ்ம்ம் இல்ல"

‘கன்னி’ நாவலைப் பற்றிய அவரது பார்வையைத் தெரிந்துகொள்ளலாம் என கேட்டுப் பார்த்தேன். "இன்னொரு முறை நாவலை வாசிங்க. உங்க எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும். அது நிச்சயமா இன்னொரு முறை வாசிக்கிற மாதிரியான நாவல் தான்" என்றார்.

அது நிச்சயமாக இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கும்படியான நாவல் என்பதால் வேறெதுவும் பேசாமல் ஆமோதிக்கும் வண்ணம் தலையசைத்தேன்.

"இன்னொரு முறை வாசிச்சிட்டு ஸ்பென்சர் (தமிழினி பதிப்பகம் ஸ்பென்சரின் தரைத் தளத்தில் உள்ளது) வாங்க. பேசுவோம்" என்றார்.
"கண்டிப்பா. கன்னி நாவல் அடுத்த பதிப்பு விடலாமே சார். எங்கயுமே கிடைக்க மாட்டேங்குது.”

"அடுத்த பதிப்பு விட்டு என்ன செய்ய? புரிய மாட்டேங்குதுன்னு சொல்றாங்க. கொஞ்ச பேர் தான் அந்த நாவல ரசிக்கிறாங்க"

"அவர் அப்டி ஒரு நாவல எழுதிட்டு அதுக்கு அப்புறம் ஏன் சார் எதும் எழுதல?"

நீண்ட பெருமூச்சு மட்டும் பதிலாய் வந்தது.

"யாரோட புக்லாம் வாசிச்சிருக்கீங்க?" என்றார்.

"குறிப்பிட்டு யாரையும் வாசிக்கல. தமிழ்ல க்ளாஸிக்ஸ்ன்னு சொல்ற புக்ஸ்லாம் வாசிச்சிட்டு இருக்கிறேன்"

“க்ளாஸிக்ஸ்னா?”

கெத் ஆனா புத்தகத்தின் பெயரைச் சொல்லி அசத்தலாம் என்று எண்ணியதால், அவர் கேட்கவும் ஒரு எழுத்தாளர் பெயரும் நினைவில் வர வில்லை.

"எஸ்.ராமகிருஷ்ணன்ட்ட இருந்து தான் ஸ்டார்ட் பண்ணேன். அவர் சிறந்த புத்தகம்னு காமிச்ச புக்ஸ். தமிழ் க்ளாஸிக் ஸீரீஸ்ன்னு வர்ற புக்ஸ்லாம் வாசிக்கிறேன்" என்றேன்.

“எஸ்.ராமகிருஷ்ணன்க்கே இலக்கியம்னா என்னனு தெரியாது. இதுல அவர் என்ன புக்ஸ் சொல்றது?"

"ஹா ஹா அது என்னவோ உண்மை தான். அவரோட யாமம்,  நிமித்தம் வாசிச்சிட்டு கடுப்பாகிடுச்சு"

"இப்போவாது புரிஞ்சுகிட்டீங்களே. அதுவே நல்ல விஷயம்”

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின் சில நாவல்களைப் பரிந்துரைத்தார்.

"கைல பணம் இல்ல. கார்ட் அக்ஸெப்ட் பண்ணுவீங்களா?" என்றேன்.

“உங்களுக்கு எவ்ளவ் புக்ஸ் வேணுமோ எடுத்துகோங்க. சென்னை வந்த அப்புறம் கொடுங்க"

"இல்ல சார். அது சரியா வராது"

“அட. நீங்க காசே கொடுக்காட்டியும் பரவால. எடுத்துட்டு போங்க. 'கன்னி ரீடர்க்கு இது கூட பண்ண மாட்டனா?'" என்றார்.

சும்மா யாராவது புத்தகம் பரிந்துரைத்தாலே வாங்கி விடுவது எனது வழக்கம். இதற்கு மேல் வாங்காமல் இருந்தால் எப்படி!

அவர் பரிந்துரைத்த புத்தகங்கள்.

எம்.கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை
சு.வேணுகோபாலின் ஆட்டம்
கண்மணி குணசேகரனின் அஞ்சலை
பால்ஸாக்கின் செந்நிற விடுதி

எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மணல் கடிகை’ புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். அட்டகாசம்!

பலராலும் மாபெரும் இலக்கியவாதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் ஒரு சில படைப்புகளைத் தவிர பலவற்றின் அருகில் அண்ட முடியாது. அப்படியிருக்கையில் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் இவர்கள் போன்ற சிலரின் படைப்புகள் வேறு பரிணாமத்தில் இருக்கின்றது.

‘கன்னி’ நாவலை மறுவாசிப்பு செய்து விரைவில் விரிவாக எழுதுகிறேன்.


- த.ராஜன்

கன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா

யாரேனும் நீ படித்த நாவல்களில் பிடித்த நாவல்  சிலவற்றை சொல் என்றால் நாலைந்து நாவல் பெயர்களைச் சொல்லுவேன். இனி யாரேனும் என்னிடம் கேட்டால் முதலில் சொல்வது ‘பிரான்சிஸ் கிருபாவின் கன்னி’ நாவலாகத் தான் இருக்கும். வேறு எவரின் எந்த வித சாயலும் இல்லாமல் கிருபாவுக்கென்றே  பிரத்யேகமான நடையில் கன்னி நாவலை குழந்தையைப் பத்து மாதம் ஒரு தாய் கருவில் சுமப்பது போல சுமந்து பெற்றெடுத்திருக்கிறார். இந்த நாவலைப் பற்றிய வாசிப்பு அனுபவம் எழுதுவது அவ்வளவு சுலபமாக எனக்குப் படவில்லை. குறைந்தது நூறு பக்கமாவது எழுத வேண்டி வரும். அது போக வார்த்தைகளில் எழுதிச் சொல்வதை விட அதை நீங்கள் படித்து உணர்வதே சரியாக இருக்கும் என்று தோன்றியதால், இந்த நாவலில் நான் ரசித்த பல வரிகளில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன். இதைப் படித்ததும் இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆசை உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் இனி நான் வாசிப்பதையே நிறுத்திக் கொள்கிறேன்.



தன் ஆசை நாயகின் மீது விழும் முதற் மழைத் துளியினை வர்ணிக்கிறார்.

'மழை வந்திருக்குமோ, மழை வருகிறதே என்று அவள் வானத்தை முகம் நிமிர்த்தி பார்த்திருப்பாளோ, அப்போது மழையின் முதற் துளி நெற்றிப் பொட்டில் விழுந்திருக்குமோ, 'ஐயோ இவள் நனைந்து போவாளே, துளிகளின் தொடர் தெரிப்பில் உடல் கன்றிப் போவாளே என்று இந்த முதற் துளி அலறிக் குரல் கொடுத்திருக்குமோ, அதைக் கேட்டு வானம் இரக்கப்பட்டு ஒரு துளியோடு மழை பொழிவதை நிறுத்தியிருக்குமோ, ஒரு முழு மழையின் ஏக்கத்தை இந்தத் தனித்துளி தாங்கி நிற்கிறதோ...'

காதலியின் மீது அமர்ந்த வண்ணத்துப்பூச்சியின் துரத்திவிடுகிறான் பாண்டி. அந்த வண்ணத்துப்ப்பூச்சியின் செய்கையை இதை விட அழகாக யாரேனும் சொல்ல முடியுமா என்ன?!

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சியின் செயல் தான் மீண்டும் கோபமூட்டியது. அது தன் வண்ணச் சிறகுகளைக் குவித்து வானத்தைப் பார்த்து கடவுளை நோக்கி கள்ளத் தனமாக பிராத்தனையில் ஈடுபட்டது, 'என் தேவனே, சர்வ வல்லமை படைத்தவறே! எந்த மனிதன் என்னை எங்கிருந்து துரத்தியடித்தானோ, அவனை நீர் அங்கிருந்து துரத்தியடிக்க வேண்டுகிறேன். அந்த வலிய மிருகத்திடமிருந்து இந்த எளிய ஜீவனைக் காப்பீராக' என்று அது மனசுக்குள் ரகசியமாக மீண்டும் மீண்டும் ஜெபித்துக்கொண்டிருந்தது. அதன் சிறகுகள் பயபக்தியோடு குவிவது வெளிப்படையாகத் தெரிந்து, அவனுக்குள் வெறி பற்றிக்கொண்டது. கோபத்தில் எரித்து விடுவது போல பூச்சியை உக்கிரமாகப் பார்த்தான். அது பிராத்தனையை நிறுத்தவே இல்லை. கடைசியில் அவன் கொலை வெறியோடு பூச்சியை நோக்கிப் பாய்ந்தான். அது தப்பித்தெழுந்து அங்குமிங்கும் பறந்தது. விடுவதாக இல்லை அவன். பூச்சியைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

கடலைப் பற்றி…!

இருள் வெடித்து அடிவானில் வெளிச்சம் பட்டை பட்டையாக உரிய ஆரம்பித்த போது கடலின் குணம் முற்றிலும் மாறிவிட்டது. அது விரோதியைப் கண்டதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டது. நீர்ப்பரப்பு மீது பொன்பட்டு தகதகத்தது. இரவெல்லாம் கூடிக் குடித்துவிட்டு விடிந்ததும் யார் நீ என்று விசாரிக்கிற தடுமாற்றமான குடிகாரனின் நடவடிக்கைக்கும் அதற்கும் பேதமொன்றும் பெரிதாக இல்லை. கண்ணுக்கெட்டும் தொலைவில் கட்டிடங்களோ மனிதர்களோ தென்பபடவில்லை. கடலைத் தவிர மற்றதெல்லாம் பொட்டல் வெளியாகப் பட்டிருந்தது. கடலின் திடீர் செருக்குக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறதோ என்னவோ!

மனநலம் பாதிக்கப் பட்ட பாண்டி மண்ணுக்குள் புதைந்து போவது போல கற்பனை செய்கிறான்.

முதலில் சுவாசிக்க காற்றில்லாமல் திணறல் ஏற்பட்டது. பிறகு சிறுகச் சிறுக மண்ணை சுவாசிக்கப் பழகிக் கொண்டான். மண்துகள்கள் நுரையீரலில் நிரம்பி நாசி வழியே வெளியேறின. மேகங்களை விளக்கிக்கொண்டு சூரியன் நம்ப முடியாத இக்காட்சியை எட்டிப்பார்த்தது. முற்றிலும் புதைய ஒரே ஒரு கணம் மீதமிருந்தபோது அவன் உள்ளங்கால்களில் மஞ்சள் வெயில் கடைசி முத்தத்தைப் பதித்தது. அவனையே வியப்போடு பார்த்துக்கொண்டு போனது சூரியன். அஸ்தமான விளிம்புக் கோட்டில் அவசரத்தில் முட்டி தலை பிளந்து தொடுவானில் சூரியனின் ரத்தம் பரவிப் பெருகி வந்தது.

சிறுவயதில் புகைப்படம் எடுக்க செல்லும் பாண்டியின் மனவோட்டம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் எல்லாம் அந்த ஸ்டுடியோவில் ஃபோட்டோ எடுத்திருந்தார்கள். நிறைய அக்காக்களின் அழகழகான படங்களும் இருந்தன. இவர்களும் சினிமாவில் நடிப்பார்களாயிருக்கும். பெயர் தெரியவில்லை. எடுத்த ஃபோட்டோவை எதற்காக வந்து வாங்கிக் கொண்டு போகவில்லை என்று யோசித்தான். காசு தட்டுப்பாடோ என்னவோ.

ஏசு சாமி ஃபோட்டோ எடுத்தபோது அவர் நெஞ்சுக்குள் பந்தாக திரண்டு எறிந்து கொண்டிருந்த பரிசுத்த ஆவி நெருப்பாக ஃபோட்டோவில் வந்துவிட்டது. அதுபோல பாண்டி வயிற்றுக்குள் குழைந்திருந்த பூரி கிழங்கும் வடையும் ஃபோட்டோவில் வந்து விடுமோ என்று அஞ்சினான். அவன் அஞ்சியபடி நடக்கவில்லை. அது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது.

குட்டி குட்டியா ரசிச்ச பல இடங்களில் சில.

காப்பியும் அம்மாவும் பாண்டிக்காகக் காத்திருந்தார்கள்.

விஷயம் வெளித்தெறிந்ததும் மக்களில் ஊமைகளைத் தவிர மற்றெல்லோரும் வாய் நோக சபித்தார்கள்.

வேப்பிலைச் சாந்தில் சிறு நெல்லியளவு உருட்டி கையில் எடுத்த பாட்டி ‘ஆ...’ காட்டச் சொன்னாள். அவள் வாயிலும் ‘ஆ’ இருந்தது.

கண்ணீர் துளிகளும் அவனை விட்டு விலகி ஓடுவதில் அவசரம் காட்டியதும் அழுவதை சட்டென்று நிறுத்தி விட்டான்.

சின்னப் பொன்னான அவளும் குட்டி சுடிதார் போட்டிருக்கிறாள். அது சுமாராகத் தான் இருந்தது. ஏன்னா, அவளுக்கு நக்கல் ஜாஸ்தி.

கபடி, கள்ளன் போலீஸ், ஐஸ் ஃபால் ரெடி, பிள்ளையார் பந்து, கிளியான் தட்டு, பாண்டி, தட்டாமாலை எல்லாம் கிரிக்கெட் வந்ததும் பெண்கள் விளையாட்டாகிவிட்டது.

ரேடியோ பாடினால் எஸ்.பி.பி, ஜானகி, ஏசுதாஸ் என்று யாரையும் விடாது. குறைத்து விரட்டிவிடும்.

யாராவது பாசத்தோடு ‘ஜிம்மி ஜிம்மி’ என்றழைத்தால் ‘ஆமா… அம்மியும்… ஆட்டு உரலும்…’’ என்று பாட்டி முணுமுணுக்கத் தவரமாட்டாள்.

அவன் சோகமடைந்ததும்  ஜிம்மியும் சோகமாகிவிட்டது. அதன் கண்கள் ‘என்ன என்ன’வென்றன. கட்டளையிட்டால் ஸ்கூலுக்குப் போய் ஜிம்மியே பரிட்சை எழுதி அவனை பாசாக்கி விடுவது போல் பாசத்துடன் சுற்றிவந்தது.

நேரடி சந்திப்புகளில் அவள் வாய் தான் பேசியது, எழுத்தில் அவள் இதயம் ஒலித்தது.

கலைந்து பறக்கும் கூந்தளுக்கு ஒரு க்ளிப் வாங்கி மாட்டி காற்றை ஏமாற்றினாள்.

ரத்தபந்தகளுக்கு ஒரு அர்த்தமும் இல்லை. அன்பு தன்னியல்பா வரணும்.

சற்றேறக்குறைய அது ஒரு காதல் கடிதத்தின் குறை பிரசவம் போலிருந்தது. சிசுக் கொலை போல அதை கிழித்துப் போட்டுவிட்டு தெளிவடைய நாட்கள் பிடித்தன.

இதில் குறிப்பிட்டிருந்த வரிகள் அனைத்தும் மொத்த நாவலில் ஒரு 30% தான். பிடித்த வரிகளை அடிக்கோடிடுவது என் வழக்கம். இந்த நாவலில் அடிக்கோடிடாத வரிகளைத் தான் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. கவித்துவமான நடை! உணர்ச்சிகளைத் திணிக்காமல் கதையின் போக்கிலேயே நம்மால் எளிதாக உணர முடியும். ஆனால் புதிதாக வாசிப்பவர்களுக்கு இந்த நாவல் உகந்ததா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. என்னை மிகவும் கவர்ந்தது மனநலம் பாதிக்கப்பட்டவனின் உலகத்தைக் காட்டியிருப்பது. அது கற்பனையின் உச்சம்!

தீக்குள்
விரலை வைத்த
காதல் இன்பம்
இப்புதினம்

கன்னி
ஜெ.பிரான்சிஸ் கிருபா
தமிழினி பதிப்பகம்
விலை ரூ 250/-

-த.ராஜன்