Saturday 11 October 2014

கன்னி – II


கடந்த வாரம் சேலம் சென்றிருந்தேன். அண்ணனின் மகனுக்குப் பிறந்தநாள் விழா. ஈரோட்டில் புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டதும் அங்கு செல்ல வேண்டுமென்ற ஆவல் தொத்திக் கொண்டது. சென்னையில் கிடைக்காத புத்தகமா இங்கே கிடைக்கப் போகிறதென்று அண்ணியும் பெரியம்மாவும் அங்கே செல்வதைத் தடை செய்ய முயற்சி செய்தார்கள். அவ்வளவு புத்தகங்களுக்கு மத்தியில் நிற்பதே பரமசுகம். ஏற்கனவே வாசிக்காத பல புத்தகங்கள் இருப்பதால் இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கலாம் என்று சென்றேன்.

காலச்சுவடு பதிப்பகத்தில் தளவாய்சிங்கத்தின் முழுத் தொகுப்பும் 60% கழிவில் கிடைத்தது. அதையும் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலையும் வாங்கிக் கொண்டு தமிழினி பதிப்பகத்தில் ஜெயமோகனின் ‘காடு’ நாவல் வாங்கச் சென்றேன். இது நான் திட்டமிட்டு வாங்கலாம் என்றிருந்த புத்தகம். ‘காடு’ நாவலின் அருகே சு.வேணுகோபாலின் ‘ஒரு துளித் துயரம்’ என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்ததால் அதையும் வாங்கிக் கொண்டு பில் போடச் சென்ற போது தான் எனக்கான இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

"ஒரு துளித் துயரம் வாசிச்சிருக்கீங்களா?" என்றார்.

"இல்ல சார், இந்த புக் பத்தி ஃப்ரண்ட் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்"

"அந்த புக்க எழுதினது நான் தான்"

"சார்ர்ர்ர்!"

எனது சந்தோஷத்திற்கு அளவே இல்ல. இதற்கு முன் அவர் புத்தகம் ஏதும் வாசித்திருந்தால் அதைப் பற்றி சிறிது நேரம் அவரோடு உரையாடியிருக்கலாம்.

அவரிடம் ‘ஒரு துளித் துயரம்’ புத்தகத்தில் கையெழுத்து வாங்கி விட்டு "ஃப்ரான்சிஸ் கிருபாவோட ‘கன்னி’ நாவல் இப்போ எங்கயுமே கிடைக்கிறது இல்லையே? அடுத்த பதிப்பு போடலயா சார்?" என்றேன்.

"அடுத்த வருஷத்துல வந்துடும்னு நினைக்கிறேன்"

"சார், ஃப்ரான்சிஸ் கிருபாவோட நம்பர் இருந்தா கிடைக்குமா?"

அவரது மொபைலில் நம்பரைத் தேட ஆரம்பித்ததும் மனம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. ரசித்து வாசித்த நாவலின் நாயகனிடம் பேசப் போகிறோம் என்ற குதூகலம்.

என் துரதிர்ஷ்டம் அவரிடம் கிருபாவின் எண் இல்லை. "இங்க காஷியர் ஒருத்தர் இருப்பார். சாப்பிட போய்ருக்கிறார். கொஞ்ச நேரத்துல வந்துடுவார். அவர் கிட்ட கேட்டுப் பாருங்க. கிடைக்கும்" என்றார்.

அவரது (சு.வேணுகோபால்) மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

வேறு சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு மறுபடியும் தமிழினி பதிப்பகம் வந்த பொழுது அந்தக் காஷியர் (தமிழினி பதிப்பகத்தின் உரிமையாளர் என்பதைப் பிற்பாடு தெரிந்து கொண்டேன்) இருந்தார்.

கடையில் அதிகக் கூட்டம் இருந்ததால் என்னைக் கண்டுகொள்ளவில்லை. அவர் பார்க்கும் பொழுது இன்முகத்துடன் இருக்கவேண்டுமென்றெண்ணியதால் சிரித்துக் கொண்டே இருந்தேன். அவர் என்னை ஏறிட்டுப் பார்க்கவும் தலைவரைப் பார்த்ததும் அசடு வழிந்து சிரிக்கும் தொண்டனைப் போல ஒரு எக்ஸ்‌ப்ரெஷன் கொடுத்தேன்.

"சொல்லுங்க" என்றார்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வேணுகோபால் சார்கிட்ட பேசிட்டு இருந்தேன். அவங்க கிட்ட ஃப்ரான்சிஸ் கிருபாவோட நம்பர் கேட்டேன். உங்ககிட்ட கேக்க சொன்னாங்க"

"எதுக்குப்பா நம்பர்?"

"அவரோட கன்னி நாவல் வாசிச்சேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அதான் அவர் கிட்ட பேசலாம்னு"

"ஓ... கன்னி வாசிச்சிருக்கீங்களா? எப்படி இருந்துச்சு?"

"இதுவரைக்கும் நான் வாசிச்சதுலயே பெஸ்ட் கன்னி தான் சார்"

"ம்ம்ம்ம். கிருபா எனக்கு ஃப்ரண்ட் தான். அவனத் தான் நானும் தேடிட்டு இருக்கிறேன். அவன் நம்பர் உங்களுக்கு கிடச்சாலும் அவன் கிட்ட பேசாதீங்க"

அதிர்ச்சியுடன், "ஏன் சார் இப்டி சொல்றீங்க?" என்றேன்.

"பேசவேணாம்ப்பா. அது உனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது"

“…………”

"கன்னி நாவல் எல்லாம் புரிஞ்சதா?"

"அந்த நாவல முழுசா புரிஞ்சுக்க முடியல. எனக்கு நிறய சந்தேகம் இருந்துச்சு"

அவசரமாய் "வாங்க வாங்க. இங்க உக்காருங்க. பேசுவோம். என்ன சந்தேகம் சொல்லுங்க?"

"சந்தேகம்னு சொல்றத விட நான் புரிஞ்சது சரியான்னு தெரியனும். நாவல் முழுக்க வந்த அமலா, கடைசில காணாம போய்ட்ராங்க. கடைசி சேப்டர் ஃபுல்லா சாரா. சாராக்கும் அமலாக்கும் நிறய ஒற்றுமை இருக்கு. அதனால அமலாவும் சாராவும் ஒன்னுனு தோணுது"

"ச்சே  ச்சே அதெல்லாம் இல்லவே இல்ல. சாரா வேற. அமலாக்கும் பாண்டிக்கும் காதல் கிடையாது"

“அப்படி  அமலாவும் சாராவும் ஒன்னு இல்லனு சொன்னாலும், அமலா மேல இருந்த காதல் தான் உடனே பாண்டிக்கு சாரா மேல வந்துச்சு"

"அந்த புக்ல அவங்க ரெண்டு பேருக்கும் காதல்ன்னு எங்க வருது சொல்லுங்க?"

"எங்கயும் நேரடியா இல்ல. ஆனா மறைமுகமா அவர் நிறய இடத்துல சொல்றார்"

"ம்ம்ம் ஹ்ம்ம் இல்ல"

‘கன்னி’ நாவலைப் பற்றிய அவரது பார்வையைத் தெரிந்துகொள்ளலாம் என கேட்டுப் பார்த்தேன். "இன்னொரு முறை நாவலை வாசிங்க. உங்க எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும். அது நிச்சயமா இன்னொரு முறை வாசிக்கிற மாதிரியான நாவல் தான்" என்றார்.

அது நிச்சயமாக இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கும்படியான நாவல் என்பதால் வேறெதுவும் பேசாமல் ஆமோதிக்கும் வண்ணம் தலையசைத்தேன்.

"இன்னொரு முறை வாசிச்சிட்டு ஸ்பென்சர் (தமிழினி பதிப்பகம் ஸ்பென்சரின் தரைத் தளத்தில் உள்ளது) வாங்க. பேசுவோம்" என்றார்.
"கண்டிப்பா. கன்னி நாவல் அடுத்த பதிப்பு விடலாமே சார். எங்கயுமே கிடைக்க மாட்டேங்குது.”

"அடுத்த பதிப்பு விட்டு என்ன செய்ய? புரிய மாட்டேங்குதுன்னு சொல்றாங்க. கொஞ்ச பேர் தான் அந்த நாவல ரசிக்கிறாங்க"

"அவர் அப்டி ஒரு நாவல எழுதிட்டு அதுக்கு அப்புறம் ஏன் சார் எதும் எழுதல?"

நீண்ட பெருமூச்சு மட்டும் பதிலாய் வந்தது.

"யாரோட புக்லாம் வாசிச்சிருக்கீங்க?" என்றார்.

"குறிப்பிட்டு யாரையும் வாசிக்கல. தமிழ்ல க்ளாஸிக்ஸ்ன்னு சொல்ற புக்ஸ்லாம் வாசிச்சிட்டு இருக்கிறேன்"

“க்ளாஸிக்ஸ்னா?”

கெத் ஆனா புத்தகத்தின் பெயரைச் சொல்லி அசத்தலாம் என்று எண்ணியதால், அவர் கேட்கவும் ஒரு எழுத்தாளர் பெயரும் நினைவில் வர வில்லை.

"எஸ்.ராமகிருஷ்ணன்ட்ட இருந்து தான் ஸ்டார்ட் பண்ணேன். அவர் சிறந்த புத்தகம்னு காமிச்ச புக்ஸ். தமிழ் க்ளாஸிக் ஸீரீஸ்ன்னு வர்ற புக்ஸ்லாம் வாசிக்கிறேன்" என்றேன்.

“எஸ்.ராமகிருஷ்ணன்க்கே இலக்கியம்னா என்னனு தெரியாது. இதுல அவர் என்ன புக்ஸ் சொல்றது?"

"ஹா ஹா அது என்னவோ உண்மை தான். அவரோட யாமம்,  நிமித்தம் வாசிச்சிட்டு கடுப்பாகிடுச்சு"

"இப்போவாது புரிஞ்சுகிட்டீங்களே. அதுவே நல்ல விஷயம்”

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின் சில நாவல்களைப் பரிந்துரைத்தார்.

"கைல பணம் இல்ல. கார்ட் அக்ஸெப்ட் பண்ணுவீங்களா?" என்றேன்.

“உங்களுக்கு எவ்ளவ் புக்ஸ் வேணுமோ எடுத்துகோங்க. சென்னை வந்த அப்புறம் கொடுங்க"

"இல்ல சார். அது சரியா வராது"

“அட. நீங்க காசே கொடுக்காட்டியும் பரவால. எடுத்துட்டு போங்க. 'கன்னி ரீடர்க்கு இது கூட பண்ண மாட்டனா?'" என்றார்.

சும்மா யாராவது புத்தகம் பரிந்துரைத்தாலே வாங்கி விடுவது எனது வழக்கம். இதற்கு மேல் வாங்காமல் இருந்தால் எப்படி!

அவர் பரிந்துரைத்த புத்தகங்கள்.

எம்.கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை
சு.வேணுகோபாலின் ஆட்டம்
கண்மணி குணசேகரனின் அஞ்சலை
பால்ஸாக்கின் செந்நிற விடுதி

எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மணல் கடிகை’ புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். அட்டகாசம்!

பலராலும் மாபெரும் இலக்கியவாதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் ஒரு சில படைப்புகளைத் தவிர பலவற்றின் அருகில் அண்ட முடியாது. அப்படியிருக்கையில் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் இவர்கள் போன்ற சிலரின் படைப்புகள் வேறு பரிணாமத்தில் இருக்கின்றது.

‘கன்னி’ நாவலை மறுவாசிப்பு செய்து விரைவில் விரிவாக எழுதுகிறேன்.


- த.ராஜன்

No comments:

Post a Comment