Tuesday 8 September 2015

நினைவுதிர்காலம் - யுவன் சந்திரசேகர்

நாதஸ்வர வித்வான் மகாலிங்கம் அவர்களை, செய்தியாளர் சரவணன் கண்ட பேட்டி ஆங்கில இதழ் ஒன்றில் வெளியானது. அதன் தமிழ் வடிவம் இது.

திருவேங்கடம் நாதஸ்வர வித்வான் மகாலிங்கம் அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன். என்னை அவரது அறையில் காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்றார். மனைவியின் மறைவிற்குப் பின் ஒரு தோட்டத்து வீட்டில் தனியாக வசிப்பதாக அறிந்திருந்தேன். அவரது அறையில் இசை சம்மந்தப்பட்ட விஷயங்கள் இருக்குமென நினைத்திருந்த எனக்கு பெரும் ஏமாற்றம். அறை முழுவதும் புத்தகங்கள். அவருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமுண்டு என்பது இதுவரை நான் கேள்விப்படாதது. பல்வேறு வகையான புத்தகங்களை மிகவும் நேர்த்தியாக வகைப்படுத்தி வைத்திருந்தார். சாய்வு நாற்காலியின் மேல் யுவன் சந்திரசேகரின் 'நினைவுதிர்காலம்' புத்தகம் கவிழ்ந்தபடியிருந்தது. அருகே ஒரு பென்சில். அவர் எவ்வாறு குறிப்பெடுப்பார் என்ற ஆவல் மேலிட புத்தகத்தின் அருகே செல்லவும் அவர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. கையில் தேநீருடன் இன்முகத்துடன் என்னை நோக்கி வந்தார். மாபெரும் கலைஞன் எனக்காக அவரே தேநீர் எடுத்து வந்தது வியப்பில் ஆழ்த்தியது.

‘உங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா’ என்றேன் வெகுளியாக.

சிரித்தார்.

‘இசை பற்றி பேச ஆரம்பிக்கும் முன் உங்கள் புத்தக வாசிப்பைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நானும் ஒரு புத்தக விரும்பி என்பதால் இப்படி. உங்களுக்கு விருப்பம் இருந்தால் சிறிது நேரம் அது குறித்து பேசலாம்’

'நானும் ஒரு புத்தக விரும்பி எனும் போது அதைப் பற்றி பேச என்ன கசக்கவா போகின்றது? இன்று முழுவதும் புத்தகம் குறித்து மட்டுமே கூட பேசத் தயார்' என்றபடி சிரித்தார். அதே சிரிப்பு.

'இசை குறித்து பேசுவதற்கு குறிப்பெடுத்திருந்தேன். திடீரென புத்தகம் என்றவுடன் எதுவும் தோன்றவில்லை. தற்போது என்ன வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?'

'யுவன் சந்திரசேகர் எழுதிய ‘நினைவுதிர்காலம்’. இசை குறித்து இப்படி ஒரு புதினம் வெளிவந்திருப்பதை வெகு காலம் அறியாமல் இருந்திருக்கிறேன். அற்புதமான நாவல்'

'எனக்கும் ஓரளவிற்கு தான் இலக்கியப் பரிட்சயம். யுவனின் எழுத்துகள் எதையுமே வாசித்ததில்லை. அவர் பற்றி கூறுங்களேன்'

'சொன்னால் நம்ப மாட்டீர்கள். யுவனின் எழுத்தை நானும் இப்போது தான் வாசிக்கிறேன். இது தான் நான் வாசிக்கும் அவரின் முதல் நாவல். வாசிக்க ஆரம்பித்த ஓரிரு பக்கங்களில் யுவனை வெகுவாய் பிடித்துவிட்டது. கவிதை, சிறுகதை, நாவல் என தொடர்ந்து சிறப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும் இவர் இலக்கியப்பரப்பில் பிரசித்தி பெறாமல் இருப்பது வருத்தமே. அவருக்கு விளம்பரம் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் அவரைப் படித்தவர்களாவது அவர் குறித்து பேச வேண்டாமா? நீங்களும் இசைப்பிரியன் என்பதால் உங்களுக்கும் ‘நினைவுதிர்காலம்’ நாவலைப் பரிந்துரைக்கிறேன். கட்டாயம் படித்துப் பாருங்கள். அவரது எல்லா படைப்புகளையும் நண்பரிடம் அனுப்பித் தரச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அடுத்த முறை சந்திக்கும் போது அவர் குறித்து விரிவாக நிச்சயம் பேசுகிறேன்'

'நினைவுதிர்காலம் நாவல் குறித்து சொல்லுங்களேன்?'

‘இசை குறித்து அபார ஞானம் யுவனுக்கு. இசையை ரசிக்கத் தெரிவதும் ஒரு கலை தான். அது குறித்து கட்டுரை எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார்கள் போல. அவரோ அதை நாவல் வடிவில் கொடுத்திருக்கிறார். ஒரு நிருபர் ஒரு இசைக்கலைஞனைப் பேட்டியெடுப்பது போன்று நாவல் வடிவம். நீண்ட பேட்டி. ஒரு இடத்தில் கூட அது ஒரு கற்பனை என்று தோன்றாத வண்ணம் எழுதியிருக்கிறார். இசையை நேசிப்பவர்களுக்கு திறப்புகள் பல கிட்டும் வகையில் உரையாடல்கள். இசையை நேசிப்பவர்களுக்கு உத்வேகம் தரும் உரையாடல்கள். இவ்வளவு நாள் நாம் கேட்டுக்கொண்டிருந்தது இசையா என்ற கேள்வியை இளைஞர்கள்  மனதில் தோன்றச் செய்யும். இசைக் கற்றுக்கொள்ள விரும்புவர்கள் அதற்கு எவ்வளவு முக்கியத்துவமும் உழைப்பும் தரவேண்டுமென்பதை வலியுறுத்தவும் செய்யும். இசைக்கு அவர் செய்திருக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இந்நாவல்'

மற்றொரு அறையில் தொலைபேசி அழைக்கும் சப்தம் கேட்டது. ஒரு நிமிடம் என்று செய்கை காட்டிவிட்டு எழுந்து சென்றார். யுவனின் 'நினைவுதிர்காலம்' நாவலைக் கையிலெடுத்து புரட்டிப் பார்த்தேன்.

காலச்சுவடு பதிப்பகம் | விலை ரூ. 230/-

- த.ராஜன்

No comments:

Post a Comment